கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி ஸ்டார் விளையாட்டுக் கழகம் நடாத்திய ஸ்டார் வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை (06) ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில் நடைபெற்றது.
அணிக்கு ஆறு பேர் ஐந்து ஓவர்களைக் கொண்ட குறித்த சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் மற்றும் மீராவோடை அல் அக்ரம் அணிகள் போட்டியிட்டன.
இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பாட்டத்தை மேற்கொண்ட அல் அக்ரம் அணியினர் ஐந்து ஓவர் முடிவில் நான்கு விக்கட்டுக்களை இழந்து 54 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் அணியினர் நான்கு ஓவர்கள் முடிவில் எவ்வித விக்கட்டுக்களும் இழப்பின்றி 55 ஓட்டங்களைப் பெற்று வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
சுற்றுத் தொடர், இறுதிப் போட்டி நாயகனாக ரேஞ்சர்ஸ் அணியின் சிரேஷ்ட வீரர் ஏ.எம். றிபாஸ் தெரிவானார்.
இவ் இறுதிப் போட்டியின் பரிசளிப்பு விழா நிகழ்வில் அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, உப தவிசாளர் யூ.எல்.அஹமட், சட்டத்தரணி ஹபீப் றிபான், உறுப்பினர் ஏ.ஜீ.அமீர் ஆசிரியர் ஆகியோர்கள் கலந்து கொண்டு வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.
இதன் போது அரச பாடசாலைகளில் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களாக நியமனம் பெற்று கடமையாற்றி வருவோர்களையும் ஸ்டார் கழகத்தினர் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.