நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை கருத்திற் கொண்டு கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்கும் நோக்கில் ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேசத்திற்கான உயர்மட்ட ஒன்றுகூடல் திங்கட்கிழமை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளரகளான எச்.எம்.முஸம்மில் மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஒன்றுகூடலில் உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அப்கர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரி.எம்.நஜீப்கான், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி திருமதி.எஸ்.எஸ்.எம்.வசீம் மற்றும் வாழைச்சேனை பொலிஸ் அதிகாரி, பிரதேச பள்ளிவாயல் நிருவாகம், வர்த்தக சங்கத்தினர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தினை அனைத்து பிரதேச மக்களும் சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும். அதனை மீறுவோருக்கு எதிராக பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை பொதுமக்களுக்கு அத்தியாவசியமான தேவைப்படும் பொருட்களை அதிக விலைக்கு விற்போருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதுடன், வியாபார நிலையங்களில் பொருட்கள் கொள்வனவு செய்வோர் தங்களது பாதுகாப்பை கருத்திற்கொண்டு பொருட்களை கொள்வனவு செய்வது கட்டாயமானது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்கும் நோக்கில் பிரதேச மட்ட பள்ளிவாயல்கள், வர்த்தக சங்கத்தினர், பிரதேச மட்ட அமைப்புக்கள் மக்களின் நன்மை கருதி மக்களுக்கு விழிப்புணர்வினை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.