கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பது தொடர்பிலான அவசர உயர்மட்டக் கூட்டம் ஒன்று, இன்று வெள்ளிக்கிழமை மாநகர முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது.
கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பொலிஸ், இராணுவம் மற்றும் கடற்படை உயர் அதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இக்கூட்டத்தில் சட்டம், ஒழுங்கை இறுக்கமாக நிலைநாட்டுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் பொது மக்களையும் வர்த்தகர்களையும் அறிவுறுத்தும் வகையில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
* கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு கல்முனை மாநகர வாழ் பொது மக்கள் அனைவரும் அவசியமின்றி வெளியில் நடமாடுவதை முற்றாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
* வீதிகள் மற்றும் பொது இடங்களில் கூடி நிற்பதை பொது மக்கள் கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
* தேவையான பொருட்களை அவசரமாக கொள்வனவு செய்து கொண்டு, வீடுகளுக்கு விரைந்து செல்லுங்கள்.
* ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் எவரும் எக்காரணம் கொண்டும் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது.
* இவ்வேளையில் வணக்கஸ்தலங்களுக்குக் கூட எவரும் செல்வதற்கு அனுமதியில்லை என்பதை பொது மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
* ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்போது வீதிகளில் நடமாடுவோர் கைது செய்யப்படுவதுடன் கொரோனா பரவலுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சிலவேளை அவர்கள் கொரோனா பரிசோதனை முகாமொன்றுக்கு அனுப்பி வைக்கப்படலாம்.
* கல்முனை மாநகர எல்லைக்குள் 05 இடங்களில் படையினரின் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, பொது மக்கள் பரிசோதனைக்குட்படுத்தப்படுவார்கள்.
* அத்துடன் பொலிஸ் மற்றும் முப்படையினரின் கூட்டு ரோந்து நடவடிக்கைகள் இடம்பெறும்.
* இந்த இக்கட்டான சூழ்நிலையில் வர்த்தகர்கள் அதிக இலாபத்தை எதிர்பார்க்காமல் அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடின்றியும் நியாயமான விலையிலும் விற்க வேண்டும்.
* உணவுப் பொருட்களை கொள்ளை இலாபத்தில் விற்கும் வர்த்தகர்கள் மீதும் அவற்றை பதுக்கி வைக்கும் வர்த்தகர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* இயலுமானவரை வர்த்தக நிலையங்கள் மற்றும் கடைகளுக்கு முன்னால் கைகளை கழுவுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
எனவே, மிகவும் அபாயமிக்க உயிர்கொல்லியான கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக பரவி வருகின்ற இந்த பேரிடர் சூழ்நிலையில் தம்மையும் தமது குடும்பத்தினரையும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு அரசாங்கத்தினால் அவ்வப்போது வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்களை முழுமையாக கடைப்பிடித்தொழுக ஒவ்வொரு பிரஜையும் மிகப்பொறுப்புடன் முன்வர வேண்டும் என்று மேயர் ஏ.எம்.றகீப் அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றார்.