கடந்த வருடம் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூரிலிருந்து உடனடியாக நாடு திரும்ப சந்தர்ப்பம் இருந்தும் வராமல் இருந்ததன் மூலம் இதுதொடர்பாக அவர் முன்கூட்டியே அறிந்திருந்தாரா என்ற சந்தேகம் எழுவதாக UNPயின் பாரளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பிரசாரம் செய்தே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இது தொடர்பாக எந்த விசாரணையையும் மேற் கொள்ளவில்லை. அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மேற்கொண்ட பாரளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணையின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் அவரது வாசஸ்தலத்துக்கு சென்றே வாக்குமூலம் பெற்றுக் கொண்டோம்.
இதுதொடர்பாக வாக்குமூலம் பெற்றுக் கொள்ளும் போது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற தினத்தில் சிங்கப்பூரில் இருந்த உங்களுக்கு உடனடியாக நாடு திரும்ப முடியாமல் போனதற்கு காரணம் என்ன என கேட்டபோது, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் அன்றையதினம் ஆசனம் இருக்கவில்லை. அதனால்தான் வரமுடியாமல் போனது என அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால் இதுதொடர்பாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் அதிகாரிகள் சிலரை பாரளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைக்கு அழைத்து கேட்டபோது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்ற தினத்தில் 20க்கும் அதிகமான ஆசனங்கள் மீதமிருந்ததாக சாட்சியமளித்திருந்தார்கள். இந்த விடயங்கள் அறிக்கையில் எழுதப்பட்டுமிருக்கின்றன.
அப்படியாயின் முன்னாள் ஜனாதிபதி பாரளுமன்ற தெரிவுக்குழுவுக்கு பொய் சாட்சியம் தெரிவித்திருக்கிறார். அத்துடன் உயிர்த் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக அறிந்து கொண்டுதான் அவர் இவ்வாறு செயற்பட்டாரா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது. அதனால் தற்போதைய அரசாங்கம் இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விசாரிக்க வேண்டும்”என்றார்.