அவுஸ்திரேலியாவில் செயல்படும் பிரபல ‘வோல்வோர்த்ஸ்’ பல்பொருள் அங்காடி ( Woolworths Supermarkets ) கொரோனா வைரஸ் அச்சுறுத்துதலால் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, கடைக்குள் நுழைவதற்கு முன், வாடிக்கையாளர்கள் தங்கள் கைகளை ஹேன்ட் சானிடைசர் கொண்டு கழுவ வேண்டும், பொருட்களை வாங்குவதற்கு ஒவ்வொருவரும் ஒரு ரொலியை மட்டுமே பயன்படுத்தவேண்டும். 1.5 Meter இடைவெளி விட்டு வாடிக்கையாளர்கள் நிற்க வேண்டும்.
மேலும் பொருட்களுக்கான பணத்தை வேலை செய்யும் ஊழியர்களிடம் நேரடியாக செலுத்தாமல், டெபிட் கார்ட் அல்லது கிரெடிட் கார்ட்களை ஸ்கேனரில் காண்பித்து அல்லது டிஜிட்டல் முறையில் செலுத்த வேண்டும். அதாவது யாருடைய கைகளையும் தொடாமல் பணம் செலுத்துமாறு வாடிக்கையாளர்களை கேட்டு கொண்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் பால் உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் அதனை வாங்குவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இவ் அங்காடியில் ஒருவர், ஒரு நாளைக்கு இரண்டு போத்தல் பாலை மட்டுமே வாங்க முடியும்.