இவ்வாறு கோருகிறார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீல. முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸிர் அஹமட்.
இது விடயமான அவரது செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது:-
கொரோனா வைரஸ் பீதியை இன்று நாடு எதிர்கொண்டுள்ள நிலையில் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் எழுந்துள்ளது. எனினும் பொதுத் தேர்தலை நடத்த வேண்டிய தேவையும் எதிர்நோக்கப்படுகின்றது. அதேவேளை இந்த வைரஸ் பரவ லை வைத்து அரசியல் நடத்தும் கைங்கரியங்களும் அரங்கேறி வருகின்றன. இதன் ஒரு அம்சமாகவே கிழக்கிலங்கைக்கு தென்கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய 194பேர் அனுப்பப்பட்டு தனிமைப்படுத்தப்படும் காரியங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.
மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக விவகாரம் ஏற்கெனவே இனவாத சிந்தனை நெருக்குவாரங்களால் சர்ச்சைக்குரியதொன்றாக மாறிவிட்டிருக்கும் சூழ்நிலையில் தற்போது அந்த விவகாரத்தை திசை திருப்பும் வண்ணம் மட்டக்களப்பு பல்கலைக்கழக வளாகத்தை சுவீகரித்து கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை நிலையமாக மாற்றும் தீர்மானத்தை அரசு முன்னெடுத்துள்ளது.
இலங்கையில் ஒதுக்குப் புறமான பொதுமக்களுக்கும் இயற்கைக்கும் கேடு விளைவிக்காத பல இடங்கள் இருக்கும்போது ஏன் சன அடர்த்தி மிக்க இடத்தை அதுவும் முஸ்லிம்கள் தமிழர்கள் வாழும் ஊர்களை மையப்படுத்தியதாக கொரோனா சிகிச்சை நிலையத்தை அரசு வலிந்து உருவாக்க வேண்டும்.?
இதில் மறைமுக நிகழ்ச்சி நிரலும் சூழ்ச்சிகளும் இருப்பதாக மக்கள் அச்சம் கொள்வதில் நியாமிருக்கிறது.
இவை அனைத்தையும் பார்க்கும்போது இன,மத ரீதியான முரண்பாடுகளைத் தோற்றி வித்து அதில் குளிர்காயும் அரசியலை நடத்தும் எண்ணம் வேருன்றி இருப்பதை உணர முடிகிறது. எனவே இக்காலவேளையில் சிறுபான்மை சமூகங்கள் நிதானமாக நடந்து கொள்ளவேண்டியது அவசியமாகின்றது.
எமது நாட்டைப் பெறுத்தவரையில் பௌத்த மத பீடங்கள் எடுக்கும் முடிவுகளையே மக்கள் சிரம்தாழ்த்தி வரவேற்பர் இந்த வகையில் தேர்தலுக்கு முன்னர் இன,மத வாத பிரசாரங்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களுக்கு தமது நிலைப்பாட்டை தெரிவிக்கும் நடவடிக்கைகளை பௌத்த பீடங்களும் அதன் பீடாதிபதிகளும் மேற் கொள்ள வேண்டும்.
அதேபோன்று சிவில் சமூகப்பிரதிநிதிகளும் முற்போக்குச்சிந்தனையாளர்களும் இன ,மத வாத பிரச்சாரங்களினால் ஏற்படும் தீமைகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று ஜனநாயக அரசியல் நிலை நிறுத்தப்பட உழைக்கமுன்வரவேண்டும்-என்றுள்ளது.
