மலையகத்தில் தரமான முறையில் தனிவீட்டுத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக சிவில் பாதுகாப்பு படையின் பொறியியல் பிரிவையும் தமது கட்டமைப்புக்குள் உள்வாங்குவதற்கு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பணிப்புரைக்கமையவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள அமைச்சின் காரியாலயத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் அண்மையில் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி கூறியதாவது,
"மலையகத்தில் கடந்தகாலங்களில் முன்னெடுக்கப்பட்ட தனிவீட்டுத் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக பாவனையாளர்கள் எம்மிடம் முறையிட்ட வண்ணமுள்ளனர். மக்களால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் உண்மையென்பது உறுதியாகியுள்ளது.
52 நாட்கள் அரசாங்கத்தின்போது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பணிப்புரைக்கமைய இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் தோட்டப்பகுதிகளுக்கு சென்று ஆய்வுகளில் ஈடுபட்டனர்.
அவர்கள் பயணம் மேற்கொண்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களானவை தரமானவையாக இல்லை என்றும், உரிய கட்டுமான நடைமுறைகளைப் பின்பற்றி நிர்மாணிக்கப்படவில்லை என்றும் ஆய்வுமூலம் உறுதிப்படுத்தி அறிக்கை சமர்ப்பித்தனர்.
எனவே, மலையகத்தில் பெருந்தோட்டப்பகுதிகளில் இனி முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டங்கள் தரமானதாகவும், உரிய நெறிமுறைகளை பின்பற்றி கட்டப்பட்டவையாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆலோசனை வழங்கினார்.
எமது தலைவரின் கோரிக்கையை ஏற்று பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியமும், சிவில் பாதுகாப்பு படையணியின் பொறியியல் பிரிவும் இணைந்து பெருந்தோட்டப்பகுதிகளில் வீட்டுத் திட்டங்களை முன்னெடுப்பது சம்பந்தமான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று அது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
இதன்படி பெருந்தோட்ட மனிதவள நிதியத்திலுள்ள பொறியியலாளர்களும், சிவில் பாதுகாப்பு படையணியின் பொறிறியலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து ஒரே நேரத்தில் திட்டங்களை முன்னெடுப்பார்கள். இதன்மூலம் தரம் என்பது ஒன்றுக்கு இரு தடவைகள் உறுதிப்படுத்தப்படும்.
ஹட்டன் வெஸ்டன் டிவிசனில் மண்வரிசால் பாதிக்கப்பட்ட 75 குடும்பங்கள் இருக்கின்றன. அக்குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் எமது புதிய அணுகுமுறையின்கீழ் விரைவில் முன்னெடுக்கப்படும்." என்றார்.
