19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பான நிலைப்பாட்டை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டும் என JVPயின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குருணாகலில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி அமைப்பின் பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில்:-
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் பற்றிய நிலைப்பாட்டை அரசாங்கம் கூற வேண்டும். கோட்டாபய மற்றும் மகிந்த ராஜபக்ச இரண்டு பேருக்கும் அது பற்றி கூற முடியாது.
அண்ணனிடம் இருக்கும் அதிகாரங்களை எடுக்க முடியுமா என்று தம்பி பார்க்கின்றார். தம்பியிடம் இருக்கும் அதிகாரங்களை எடுக்க முடியுமா என்று அண்ணன் பார்க்கின்றார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் எந்த வகையிலும், மக்களுக்கு நன்மையானதாக இருக்காது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெறவும் முடியாது.
UNP கட்சியல்ல. அவர்கள் 15 வருடமாக கட்சிக்குள் சண்டையிட்டு கொள்கின்றனர். ஆட்சியில் இருக்கும் போதும் சண்டையிட்டு கொள்கின்றனர். எதிர்க்கட்சியில் இருக்கும் போதும் சண்டையிட்டு கொள்கின்றனர்.
நாட்டின் அழிவான ஆட்சி நிர்வாகத்திற்கு எதிரான போராட்டம் அவசியமாகிறது. பாரளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்திக்கு வலுவான பலத்தை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.