எம்.ரீ. ஹைதர் அலி-
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத் துறையினை மேம்படுத்தும் முகமாக மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் விளம்பரப் பதாகை ஒன்று கிழக்கு மாகாண சுற்றுலாத் துறை பணியகத்தினூடாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை பல்லின சமூகங்கள் மிக உயர்ந்த பண்பாடுகளுடனும் தமக்கான பிரத்தியேக கலாச்சாரத்தையும் ஒழுக்க ரீதியான உயர்ந்த கோட்பாடுகளை கொண்ட நாடாகும்.
அந்த வகையில் அரசாங்கம் என்பது இவைகளை பாதுகாத்து தமது முன்னெடுப்புக்களை செய்ய வேண்டிய கடமைப்பாட்டில் உள்ள மிகப்பெரிய நிறுவனமாகும்.
தனியார் நிருவனங்கள் தமது வியாபாரத்தை அதிகரித்து அதிக இலாபமீட்டக்கூடிய வகையில் மக்களை கவரும் யுக்திகளை கையாண்டாலும் அரசாங்கம் என்பது இலாபத்தை மாத்திரம் மையமாகக் கொண்டு செயற்பட முடியாது.
கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தினூடாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் புகைப்படம் என்பது எமது நாட்டில் உள்ள எந்தக் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்காது மேற்கத்திய கலாச்சாரத்திலும் நமது கலாச்சாரத்தில் தாக்கம் செலுத்தக் கூடிய ஓர் புகைப்படம் பிரசுரிக்கப்பட்டிருப்பதென்பது மிகவும் கவலைக்குரியதாகும்.
இதனை அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கும், கிழக்கு மாகாண கௌரவ ஆளுனர் அவர்களுக்கும் எழுத்து மூலமாக தெரியப்படுத்தி உடனடியாக குறித்த பதாகையில் உள்ள படத்தை நீக்கி நமது நாட்டு கலாச்சாரத்தை பிரதிபலிக்கக் கூடிய உடைகளில் புகைப்படங்களை பிரசுரிக்குமாறு கேட்டுக் கொள்வதாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கேட்டுக் கொண்டுள்ளார்.