யாழ் பல்கலைக்கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரி கந்தசாமிக்கு பதவி நீடிப்பு


பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரியாக வாழ்நாள் பேராசிரியர் கந்தசாமிக்கு எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி 06 ஆம் திகதி வரை பதவி நீடிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் மெஹான் டி சில்வாவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் பிரிவு 20, உப பிரிவு 4 (b) க்கு அமைவாக நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரினால் கடந்த 7ஆம் திகதி வெளியிடப்பட்ட 2148/35 ஆம் இலக்க அதி சிறப்பு அரசிதழ் கட்டளைக்கு அமைவாக இம்மாதம் 7 ஆம் திகதி முதல் மூன்று மாத காலத்துக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நியமனத்தின் பிரகாரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பதவிக்காக வாழ் நாள் பேராசிரியர் க. கந்தசாமிக்கு வழங்கப்படும் மாதாந்தப்படி, அலுவலகம், மற்றும் ஆளணி, குறித்தொதுக்கப்பட்ட வாகனம், சாரதி, எரிபொருள் உட்பட சகல வசதிகளும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனாவினால் திடீரென பதவி நீக்கப்ட்டதன் பின்னர் மே மாதம் முதல் வாழ் நாள் பேராசிரியர் க. கந்தசாமி உயர்கல்வி அமைச்சரினால் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தரின் கடமைகளையாற்றும் வகையில் தகுதி வாய்ந்த அதிகாரியாக மூன்று மாதங்களுக்க நியமிக்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு பதவி நீடிப்பும் வழங்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 07 ஆம் திகதி முதல் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி வரை மீள் பதவி நீடிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இதே வேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு, கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் காரணமாக துணைவேந்தர் தெரிவுக்கான நடவடிக்கைகள் அனைத்தும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் நிறைவுபெற்றிருக்கும் நிலையில், துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்திருக்கும் 9 பேரில் பொருத்தமான மூவரை பேரவையில் தெரிவு செய்து, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பு தகுதி வாய்ந்த அதிகாரியையே சாரும். பேரவையினால் பரிந்துரைக்கப்படும் மூவரில் ஒருவரைத் துணைவேந்தராக நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -