சிறுபான்மையினரான தமிழ் மொழிச் சமூகங்களின் போராட்டம் தவறாகப் புரியப்பட்டதன் துயர விளைவே வடபுல முஸ்லிம்கள் மீதான இனச்சுத்திகரிப்பு. பெரும்பான்மை மேலாதிக்க சிந்தனையுள்ள சிங்கள ஆட்சியாளர்களின் போக்குகள், தமிழ் மொழிச் சமூகங்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை கடுமையாகப் பாதித்தன. தனிச்சிங்களச் சட்டம், திட்டமிட்ட குடியேற்றங்கள், கல்வித்தரப்படுத்தல், தமிழ் மொழியினருக்கும் அதிகாரங்களைப் பகிராத ஆணவப்போக்குகள் எல்லாம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த தமிழரையும் முஸ்லிம்களையும் மனக்கிளர்ச்சியூட்டின. இக்கிளர்ச்சிகள் 1956 இல் சிறுபான்மையினரின் உரிமைகளைக் கோரும் அஹிம்சைப் போருக்கு வித்திட்டது. இதைக் கையாள்வதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் சிங்கள அரசாங்கங்கள் கைக்கொண்ட நடவடிக்கைகள் அஹிம்சைப் போரிலும் இவர்களை நம்பிக்கையிழக்கச் செய்தது. இப் பின்புலங்களின் வளர்ச்சி வன்முறையாக வடிவமெடுத்து தமிழ் மொழிச் சமூகங்களின் அரசியல் உரிமைக்கான ஆயுதப்போராக உருமாறியது. பின்னர் படிப்படியாக வடக்கு, கிழக்கு விடுதலைப் போராட்டமாக இது பரிணாமம் எடுத்தது.
சிங்கள அரசுகளின் தீர்மானங்கள், நடைமுறைகள் உள்ளிட்ட சகல திட்டங்களும் தமிழர்களை மட்டுமல்லாது, முஸ்லிம்களையும் அதே கணத்தில் - ஒரே தரத்தில் பாதித்தன. மொழி, வாழிடம், பொருளாதாரம், கலாசாரங்களில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள பொருத்தமும் பொதுமையுமே இதற்கான காரணங்களாகும். இதனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த முஸ்லிம்களும் இந்த விடுதலைப் போராட்டத்துடன் இணங்கவேண்டி இருந்தது. தமிழ் பேசும் மக்கள், இஸ்லாமியத் தமிழர்கள், வடகிழக்கு மண்ணில் அருகருகே அந்நியோன்யமாக வாழ்வோர், அதே தமிழ் மண்ணில் அசையும், அசையாத சொத்துக்களை உடையோர் என்ற பொதுமையும், தாய் மொழியில் உண்டான நெருக்கமும் தமிழரையும் முஸ்லிம்களையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாதிருந்தது.
இதற்கும் மேலாக மத அனுஷ்டானங்களில் ஜும்ஆப் பிரசங்கம், விஷேட சொற்பொழிவுகள், பிரார்த்தனைகளில் கூட தமிழ் மொழிக்கு முஸ்லிம்கள் முன்னுரிமை கொடுத்தனர். "இஸ்லாம் எங்கள் வழி, இன்பத்தமிழ் எங்கள் மொழி" என்ற இலட்சியம் வடக்கு, கிழக்கில் மத வேறுபாடுகளை மறக்கடித்திருந்தது. வடக்கு, கிழக்கிலுள்ள முஸ்லிம் மாணவர்கள் தமிழ் மொழியிலே படித்து, அதே மொழியிலே பரீட்சையும் எழுதினர். இதனால் தமிழரைக் குறியாக வைத்துக்கொண்டு வரப்பட்ட கல்வித் தரப்படுத்தல் முறை, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்காக வடக்கு,கிழக்கில் எடுக்கப்பட்ட காணிகள், அரச தொழில் வாய்ப்புக்களில் சிங்கள மொழிக்கு வழங்கப்பட்ட முன்னுரிமை, தமிழ் மொழிக்கு காட்டப்பட்ட அரசின் ஓரக்கண் பார்வை, மனோபாவங்கள் எல்லாம் தமிழரைப் பாதித்த அதே அளவிலேயே முஸ்லிம்களையும் பாதித்திருக்கும். இந்த யதார்த்தங்களே ஆயுதப் போராட்டத்தில் முஸ்லிம்களையும் ஒன்றிக்கச் செய்தது.
இதைப் புரிந்துகொள்வதில் விடப்பட்ட தவறுகளே முஸ்லிம்களை வேறு சமூகமாகவும், மதத்தை முன்னிறுத்தி அடையாளப்படுத்திய மூன்றாவது இனமாகவும் இலங்கை அரசியலில் தலைகாட்ட வைத்தது. இதைச் சரிசெய்து மீண்டும் தமிழ் மொழிச் சமூகமென்ற மொழி அடையாளத்துக்குள் முஸ்லிம்களை இணைப்பதில் விடப்பட்ட தவறுகளிலிருந்தே, இனச்சுத்திகரிப்புக்கான அத்திவாரமும் ஆரம்பமானது. இஸ்லாமியத் தமிழர் என்ற அடையாளத்துக்குள்ளும் தமிழ் மொழிச்சமூகத்தினர் என்ற பொதுமைக்குள்ளும் மீண்டும் முஸ்லிம்கள் உள்வாங்கப்பட்டிருந்தால், வடக்கு, கிழக்கு விடுதலைப் போராட்டம் வெற்றியீட்டியிருக்கும். அல்லது போராட்டத்தின் அடிப்படை இலட்சியமான இணைந்த வடக்கு - கிழக்கில் சமஷ்டியைப் பெற்றிருக்கும். இவ் வெற்றிக்கு வேட்டு வைத்தது வடபுல முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றமே.
முஸ்லிம்கள் தமிழைப் பேசினாலும், மதத்தால் வேறு இனத்தவர் (இஸ்லாமியர்) என்ற அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் இந்த வெளியேற்றமே வெளியுலகுக்கு எடுத்துக்காட்டியது. வடக்கில் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட கிறிஸ்தவர்கள் வாழ்ந்த போதும், அதே மொழியைப் பேசிய முஸ்லிம்களை மட்டும் திட்டமிட்டு வெளியேற்றி, புலிகள் இச்செய்தியை தெளிவாகச் சொல்லியுள்ளனர். இத்துடன் மட்டுமன்றி ஒரு சமூகத்தின் கலாசார அடையாளங்களை அழித்தும், வாழிடங்களை ஒழித்தும், பொருளாதாரத்தை ஒடித்தும் மிகநீண்ட வரலாறுடைய வடபுல முஸ்லிம்களின் சரித்திரத்தை மூடி மறைக்கவும் முயற்சித்தமை, நிச்சயமாக இனச்சுத்திகரிப்பாகவே இருக்கும்.
தமிழ் தேசியத்துக்குள் முஸ்லிம்களை உள்வாங்க விருப்பமின்றி வடபுல முஸ்லிம்களை வெளியேற்றியதால் தமிழுக்குப் பதிலாக சிங்களத்தை கற்க வேண்டிய நிர்ப்பந்தம் இம்மக்களுக்கு ஏற்பட்டது. 1990 ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாத கடைசி வாரங்களில் சுமார் 18,000 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 90,000 முஸ்லிம்கள் வடக்கை விட்டு வெளியேற்றப்பட்டபோது, தென்னிலங்கை மாவட்டங்களுக்குள் அடைக்கலம் தேடவேண்டி ஏற்பட்டது. இதனால் இம்முஸ்லிம்கள் தாய் மொழியிலிருந்து தூரமாகி சிங்களத்தில் சரளமாகப் பேசும் நிலையும் ஏற்பட்டது. இம்மாற்றம் தமிழ் மொழி பேசுவோரின் தேசிய விகிதாசாரத்தையும் குறைத்து, அரச மொழிக்கான அந்தஸ்தையும் கேள்விக்குட்படுத்தியது.
வட மாகாணத்தில் 1990 இல் 90,000 பேராக வெளியேறிய முஸ்லிம்களின் சனத்தொகைப் பெருக்கத்தில் அரைவாசிக்கும் மேலான இளைய தலைமுறையினர், இப்போது சிங்கள மொழியில் பரிச்சயமுள்ளோராக உள்ளமை இந்நிலைமைகளைப் படம் பிடித்துக்காட்டுகிறது. வடக்கில் 90 வீதமாக வாழும் தமிழர்களுக்குள், 10 வீதமாக வாழ்ந்த முஸ்லிம்களின் சனச்செறிவு விடுதலைப் போராட்டத்துக்கு இடைஞ்சலாக இருந்திருக்காது. புலிகளின் படைப்பலம், ஆயுதப்பலம், நிர்வாகக் கட்டமைப்பு, உளவுத் துறைகளை மீறி எவரும் போராட்டத்தைக் காட்டிக்கொடுக்க முடியாத நிலையில், வெறும் 10 வீதமான முஸ்லிம்கள் எதைச் செய்ய முடியும். அரச படைகளுக்கு உளவு வேலை, ஒற்றர் வேலை செய்திருந்தால் குறித்த முஸ்லிம்களைக் கொன்றிருந்தாலும் கவலைப்பட்டிருக்க நியாயமில்லை. ஓரிருவர் செய்த தவறுகளுக்காக, ஒட்டுமொத்த மக்கள் கூட்டத்தையும் துரத்தியமை, தமிழரல்லாத சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி.
எனவே முஸ்லிம்களை வெளியேற்றிய விடயத்தில், சிங்கள அரசுகளின் மாற்றாந்தாய் மனநிலையே பார்க்கப்பட்டுள்ளது. கிழக்கில் தமிழ், முஸ்லிம் கலவரங்கள் ஏற்பட்டதால் வடபுல முஸ்லிம்களைப் பாதுகாப்பாக வெளியேற்றியதாகவும் ஒரு விவாதம் முன்வைக்கப்பட்டது. அவ்வாறானால் முஸ்லிம்கள் விட்டுச்சென்ற சொத்துக்கள், கால்நடைகள், காணிகள், வீடுகள், வாகனங்களைப் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும்.
புலிகளின் காலத்திலேயே இவை அனைத்தும் மாவீரர்கள் குடும்பங்களுக்குப் பங்கிடப்பட்டன. முஸ்லிம்களின் மீனவ துறைமுகங்கள் புலிகளின் கடற்படைத்தளமாக்கப்பட்டன. விட்டுச்சென்ற காணிகளில் முகாம்கள், பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டதெல்லாம் திட்டமிட்ட இன அழிப்பின் பின்புலங்களே. இத்தனைக்கும் இன்றும் கூட இக்காணிகள், வீடுகள், கட்டிடங்களைப் பெறுவதில் முஸ்லிம்கள் பல இழுபறிகளுக்கு உள்ளாகின்றமை எஞ்சியுள்ள புலிச்சிந்தனைகளின் எதிரொலிகளே. 22,000 வீடுகள், 2402 வர்த்தக நிலையங்கள், 340 பள்ளிவாசல்கள், 1௦௦ க்கு மேற்பட்ட மத்ரஸாக்கள், 39,400 ஏக்கர் விவசாயக் காணிகள், 47, 5000 கிராம் நிறையுடைய தங்க ஆபரணங்கள், 211000 கால் நடைகள், 320 கார்கள், வேன்கள், லொறிகள், 800 மோட்டார் சைக்கிள்கள், 4000 துவிச்சக்கர வண்டிகள், 800 வண்டில்கள், 850 மீனவப்படகுகள், 400 இயந்திரப்படகுகள், 1200 மீனவ வலைகள், 200 குளிர்சாதனப் பெட்டிகள், 2000 தொலைக்காட்சிகள், 600 வானொலிகள் என்பவற்றை முஸ்லிம்கள் வடக்கில் விட்டு வெளியேறினர். இந்தச் சொத்துக்களே இச்சமூகத்தின் இருப்புக்கான அடையாளங்களாகும். இவை அனைத்தும் திட்டமிட்டும், திடீரெனவும் அழிக்கப்பட்டமையும், போரில் இன்னும் சில அழிந்தமையும் இம்மக்களை சொந்த மண்ணில் ஏதிலிகளாக்கி அலைக்கழிக்க வைத்துள்ளன.
இவ்வாறு இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை அதிகம் உள்வாங்கிய தென்னிலங்கை பிராந்தியமாக புத்தளம் உள்ளது. சுமார் 15,000 குடும்பங்களை இம்மாவட்ட மண் பொறுப்பேற்றது. இவர்களைக் குடியேற்ற கல்பிட்டி பிரதேச தென்னந்தோப்புக்கள் அழிக்கப்பட்ட போது பல எதிர்ப்புக்கள் கிளம்பினாலும், இன்று "தோப்பு வீழ்ந்து தோழமையான" உறவே நிலவுகிறது. முஸ்லிம்கள் மீதான சகோதர வாஞ்சைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இது. இறைதூதர் முஹம்மது நபியவர்களும் மக்காவை விட்டு மதீனாவுக்கு புலம்பெயர்ந்து சென்றபோது, காட்டப்பட்ட அதே சகோதரத்துவம் (Brother Hood), புத்தளம் மாவட்டத்திலும் காட்டப்பட்டுள்ளது. சொத்தில் பாதி, உழைப்பில் பாதி, படிப்பில் பாதி என அனைத்தையும் பாதியாகப் பங்கிட்ட புத்தளம் மாவட்ட மக்கள், சகோதரத்துவ வாஞ்சைக்கு சிறந்த உதாரண புருஷர்களே. இதே போன்று கம்பஹா மாவட்டத்தில் 1050 குடும்பங்கள், அநுராதபுரத்தில் 865 குடும்பங்கள், குருநாகலையில் 487 குடும்பங்கள், கொழும்பு மாவட்டத்தில் 425 குடும்பங்களும் அடைக்கலம் புகுந்தன. களுத்துறை, மாத்தளை, கண்டி, கேகாலை மாவட்டங்களையும் அகதிகளாக வந்த முஸ்லிம்கள், தமது அடைக்கல மண்ணாக அரவணைத்துக் கொண்டனர். எத்தனை வருடங்களுக்கு இந்த வாழ்க்கை. கட்டுக்கடங்காத சனத்தொகை வளர்ச்சியாலும் அதனாலுண்டாகும் பௌதீகப் பிரச்சினைகளையும் தாங்குவதில் புத்தளம் மாவட்டம் மூச்சுத்திணறுகிறது.
பாடசாலைகளில் இட நெருக்கடி, வீடுகளைக் கட்டுவதில் பொருளாதாரச் சிக்கல், விவசாயம், வியாபாரம் மற்றும் கால்நடை வளர்ப்பை நம்பி வாழ்ந்த வடமாகாண முஸ்லிம்களுக்கு, புத்தளம் மாவட்ட மண்ணும் சீதோஷ்ண நிலையும் பொருந்திப் போகவில்லை. மீனவர்கள் மாத்திரம் தமக்கிருந்த திறமைகளைப் புத்தளம், கற்பிட்டி கடல் பிரதேசங்களில் பயன்படுத்திக்கொண்டனர். கால்நடை வளர்ப்பிற்கும், விவசாயம், வியாபாரத்துக்கும் இப்பிரதேசம் இணங்காதமை இவர்களைப் பொருளாதார பின்னடைவுக்குள் மேலும் திணித்தது. இந்தத் திணிப்பும் திண்டாட்டமும் தமது பூர்வீக வாழிடங்களுக்குத் திரும்பும் இவர்களது ஆசைகளை மிகைப்படுத்திக் கொண்டிருக்கிறது.
தம்மை வெளியேற்ற புலிகள் தீர்மானித்த போது, அதற்கெதிராக எதுவும் பேச முடியாது திகைத்து நின்ற தமிழ் சகோதரர்களின் பரிதாபப் பார்வைகள், இயலுமான வரை புலிகளுக்குத் தெரியாமல் முஸ்லிம்களின் சொத்துக்களைப் பாதுகாத்துப் பத்திரப்படுத்திய தமிழர்களின் மனிதாபிமானம், தீர்மானத்தை கைவிடுமாறு புலிகளைக் கோரிய கிறிஸ்தவ பாதிரிமார்களின் வேண்டுதல்கள், எல்லாவற்றையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கும் வடபுல முஸ்லிம்கள், பயங்கரவாதத்தின் கொடிய பிடிக்குள் மனிதாபிமானத்தைக் கட்டிப்போட முடியாதென்று, இந்த வெளியேற்றக் காட்சியில் கற்றுக்கொண்டனர். இந்த மனிதாபிமான நம்பிக்கையும், தென்னிலங்கை மாவட்டங்களில் பத்து பேர்ச் காணிகளுக்குள் முடங்கிய அகதி வாழ்வின் வலிகளுமே இம்மக்களின் தாயகம் நோக்கிய தாகத்தை இரட்டிப்பாக்கியுள்ளது.
எனினும் மத்திய, நடுத்தர குடும்பத்து மக்கள் அடைக்கலம் புகுந்த மண்ணின் வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுள்ளதால், பூர்வீக இடங்களுக்குச் செல்வதில் விருப்பமின்றி உள்ளனர். பிள்ளைகளின் கல்வி, பாடசாலைகள், சுகாதாரம், தொழில் வாய்ப்புக்களை எண்ணியே இவர்கள் அச்சப்படுகின்றனர். இந்நிலைமைகள் மீள்குடியேற்றத்தில் பின்னடைவுகளையும் ஏற்படுத்துகின்றன. சன்னார், முசலிப் பிரதேசங்களில் கட்டித் திறக்கப்பட்டுள்ள வீடுகளின் சாவிகளை வாங்கியுள்ள சிலர், மாதத்துக்கு ஒரு முறையே பூர்வீக இடங்களைப் பார்வையிட்டுத் திரும்புகின்றனர். மேலும் தாயகம் திரும்புவோர் அங்கு எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சிலரை மீளக்குடியேற்றுவதில் விருப்பமிழக்கச் செய்கின்றன.
காணிகளை அடையாளங் காணமுடியாத நிலை, அடையாளங் கண்டாலும் எல்லைகளை அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு காடுகள் வளர்ந்துள்ளமை, காணி உறுதிகளைப் பெறுவதற்கான ஆவணங்கள் இல்லாமை போன்ற ஏகப்பட்ட பிரச்சினைகள். அத்துடன், புலம்பெயர் வாழ்க்கையில் தென்னிலங்கை மாவட்டங்களில் பிறந்த இவர்களின் பிள்ளைகளுக்கு வெளியூர் மாவட்ட பிறப்புச்சான்றிதழ்களே உள்ளன. இதனால் வெளியூர் பிள்ளைகளை வடக்கில் குடியமர்த்துவதாகவும் விமர்சனங்கள் கட்டவிழ்க்கப்படுகின்றன.
எதையும் கொண்டு செல்ல அனுமதிக்கப்படாத இம்மக்கள், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வெளியேறுகையில் காணி உறுதி, பிறப்புச்சான்றிதழ், வாக்காளர் அட்டைகளை எடுத்துச்,செல்ல அவகாசம் இருக்கவில்லை. குறிப்பாக, முப்பது வருட புலம்பெயர் வாழ்வில் பிறந்த வடபுல முஸ்லிம்களின் பிள்ளைகள் இன்றைய காலகட்டத்தில், முப்பது வயதுக்கு கீழான வயதுகளை எட்டியிருப்பர். ஆனால், இவர்கள் பிறந்த மாவட்டங்கள் புத்தளமாகவோ, குருநாகலையாகவோ, அநுராதபுரமாகவோ பதியப்பட்டிருக்கலாம். அதற்காக இப்பிள்ளைகளின் பூர்வீகம் வட மாகாணம் இல்லை என்று கூற முடியாது. புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ் சகோதரர்களின் இளைய வாரிசுகளும் இன்று இதே வயதுகளிலேயே இருப்பர். பிறப்பிடம் லண்டன், பிரான்ஸ், நோர்வேயாகவே இருந்தாலும் இப்பிள்ளைகளின் பூர்வீகம் வடக்கு, அல்லது கிழக்காகவே கொள்ளப்படுகிறது. இதற்காகவே இப்பிள்ளைகளுக்கு இரட்டைப் பிரஜாவுரிமையும் வழங்கப்படுகின்றன. இதேபோன்ற பார்வையிலேயே வடபுலப் பெற்றோர்கள், வேறு மாவட்டங்களில் வாழ்ந்து அங்கு பிறந்த அவர்களின் பிள்ளைகளையும் பார்க்க வேண்டும்.
மேலும், முப்பது வருடங்களைக் கடந்த புலம்பெயர் வாழ்க்கையில் சில குடும்பத்து மூத்தவர்கள் உயிரிழந்துள்ளனர். மூத்தோர், அல்லது பாதுகாவலர்கள் உயிரிழந்த குடும்பங்களின் காணிகள், சொத்துக்களுக்கான பின்னுரித்தாளிகள் பற்றித் தெளிவில்லாதுள்ளன. கிராம சேவை அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், கச்சேரிகளில் இம்மக்கள் வாழ்ந்த அடையாளங்களுக்கான ஆவணங்கள் காணாமல் போயுள்ளன. இவை திட்டமிட்டுத் தொலைக்கப்பட்டுள்ளதா? அல்லது இயற்கையாகத் தொலைந்ததா? என்பதையும் விட, இவ்வாறு தொலைந்த ஆவணங்களை மீண்டும் வழங்குவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டியுள்ளன.
இந் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படாததாலே காணி உறுதிகள், இங்கு வாழ்ந்தோருக்கான பிறப்புச்சான்றிதழ்கள், வாழ்வாதார உரிமைகள் மற்றும் வாக்குரிமைகளைப் பெறுவதில் சிரமங்களை ஏற்படுத்தி, மீள்குடியேறுவதிலும் சில தடங்கல்களை ஏற்படுத்துகின்றன. 1990 இல் வெளியேறும் போது இரண்டு, மூன்று பிள்ளைகளுடன் ஒரு குடும்பத்தில் சாதாரணமாக ஐந்து பேர் இருந்திருப்பர். மீளத்திரும்புகையில் பேரன், பேத்தி, பாட்டி, பாட்டன், மகன், மருமகள் எனக் குடும்பங்கள் பெருகியுள்ளதால், காணிகளும் போதாதுள்ளன. இன்னும் பௌத்த கடும்போக்குவாதத்தின் எச்சரிக்கைகள், எரிச்சல்களும் மற்றொரு இனவாதமாகவே பார்க்கப்படுகிறது.
ஆயுத முறையிலான அடக்கு முறைக்குள் அழிந்துபோன வடபுல முஸ்லிம்களின் இருப்புக்கள், சிங்கள, பௌத்த கடும்போக்கின் செயற்பாடுகளாலும் அழிக்கப்படுமோ? என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வில்பத்து இயற்கை சரணாலயத்தை அழித்து, முஸ்லிம்களைக் குடியேற்றுவதாக அமைச்சர் ரிஷாட்டைக் குற்றம் சுமத்தும் பின்னணிக்குள் மறைந்துள்ளவை எது? தமிழ் மொழிச் சமூகத்துக்கு சொந்தமான வடக்கு, கிழக்கின் எல்லைக் கிராமங்களில் ஒட்டுமொத்தமாக சிங்களவர்களைக் கொண்டுவந்து குடியமர்த்தும் தூரநோக்கம் இப்பின்னணிக்குள் உள்ளது. மீள்குடியேற்றத்துடன் தொடர்புடைய, மன்னார் மாவட்டத்தைச் சாராத இவ்வில்பத்தை அண்மித்த முசலிப் பிரதேசத்திலே, முப்பது வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம்கள் வாழ்ந்திருந்தனர் கவனிப்பாரற்று கைவிடப்பட்ட இம்மக்களின் வாழிடங்களில் காடுகள், புற்கள் வளர்ந்து வில்பத்து வனத்துக்குப் போட்டியாக நிற்கின்றன.
இந்நியாயத்தை அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் மாத்திரம் புரியவைக்க முடியாது. தமிழ்தேசம் ஒட்டுமொத்தமாகத் திரண்டு இவற்றைப் புரியவைப்பதிலேயே வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ்மொழிச் சமூகங்களின் வாழிடங்களைப் பாதுகாப்பதற்கான ஒரே வழியுள்ளது. இவ்விடயத்தில் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள் பழையவற்றை மறந்து பணியாற்ற வேண்டும். கடைசி யுத்தத்தில் இடம்பெற்றதை தமிழினப்படுகொலையாகக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய வடமாகாண சபை, வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றத்தை, திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு என்று தீர்மானிக்கவில்லை. ஆகக்குறைந்தது இவ்வெளியேற்றத்தைக் கண்டித்தேனும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தால், மீளக்குடியேறும் முஸ்லிம்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும்.
எனவே வடக்கு, கிழக்குத் தமிழர்கள் விடயத்தில் சர்வதேசம் கொண்டுள்ள அக்கறை போன்று, தாயகத்திலிருந்து விரட்டப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் விடயத்திலும் சர்வதேசம் அக்கறைகொள்ள வேண்டும். இதற்கு அவசரமாகத் தேவைப்படுவது முஸ்லிம் சமூகத்துக்கான ஏக அரசியல் பலமே. அகதி வாழ்வில் அவதியுறும் முஸ்லிம்களின் துயர்களைப் போக்கவும், வடபுல முஸ்லிம்களின் பூர்வீக இருப்பு இழக்கப்படுவதை தடுக்கவும் முஸ்லிம் தலைமைகள் இணைந்து காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்வது காலத்தின்தேவையாகின்றது.
(வடபுலமுஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 29ஆம் வருட நிறைவையொட்டி இந்த கட்டுரை பிரசுரமாகின்றது)
{ மன்னாரிலிருந்து இந்த பதிவை இடுவதில் மகிழ்ச்சி}