சம்பள முரண்பாடுகளை நீக்குதல், ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய நலன்களைப் பெற்றுக் கொள்ளுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இலங்கை அனைத்தப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள இரண்டுநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக ஆரம்பமானது. இந்த போராட்டத்தை ஆரம்பித்தது வத்து உரையாற்றும்போதே ஊழியர் சங்கத்தலைவர் எம்.எம்.நௌபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“பெரிய கதிரைக்கு ஒரு விதம் சிறு தொழிலாளிக்கு இன்னொரு விதம் முறைமைகளை மாற்று தொழிலாளர்களை ஊக்குவி MCA கொடுப்பனவை எம்மவருக்கும் அதிகரி”
என்பனபோன்ற கோஷங்கள் முழங்க இடம்பெற்ற போராட்டத்தின் போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஊழியர் சங்க பிரதிநிதிகள் கடந்த 2019.07.30 அன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை நடாத்தியதாகவும் அரசு அதற்கு சாதகமான பதிலை வழங்கவில்லையெனவும் அதன்காரணமாகவே (48 மணிநேர) பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொள்ள அனைத்து பல்கலைக்கழக ஊழியர்கள் சம்மேளனம் தீர்மானித்ததாகவும் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
அந்த வகையில் (28.08.2019) இன்று தத்தமது பல்கலைக்கழகங்களிலும், 29.08.2019ம் திகதி அனைத்து ஊழியர்களினையும் ஓரணியில் திரட்டி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக பாரியவிலான ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டு எமக்குரிய தீர்வினை விரைந்து எடுக்க போராட்டத்தினை மேற்கொண்டுள்ளவுள்ளதாகவும், தொடர்ந்தும் எமது கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தயாராகவுள்ளதாகவும் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படது.
பின்வரும் கோரிக்கைகளினை அவர்கள் முன்வைத்து உரிய தீர்வுக்கு எதிர்பார்த்துள்ளதாகவும் போராட்டக்காரர்களால் தெரிவிக்கப்பட்டது..
1. 2020 ஜனவரியில் பல்கலைக்கழக சமூகத்தினரின் அடிப்படை சம்பளத்தை 2015 டிசம்பர் அடிப்படைச் சம்பளத்தின் 107% ஆல் அதிகரிக்க தேவையான சுற்றுநிருபத்தை வெளியிடல்.
2. 45% மாதாந்த இழப்பீட்டுக் கொடுப்பவை 75% வரை உயர்த்துவதற்கு அவசியமான சுற்றுநிருபத்தை வெளியிடுதல்.
3. பல்கலைக்கழக முறைமைக்கு செலுத்தப்படுகின்ற ஓய்வூதியத்தை பயனுள்ளதாக தயாரித்துக் கொள்ளல்.
4. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மொழித் தேர்ச்சி கொடுப்பனவை செலுத்துவதற்கான சுற்றுநிருபத்தை வெளியிடுதல்.
5. அனைத்து பல்கலைக்கழக சமூகத்தினருக்கும் பொதுக் காப்புறுதி முறையொன்றை நடைமுறைப்படுத்தல்.
6. கொடுப்பனவுகள் மற்றும் சகல கடன் எல்லைகளையும் அதிகரித்தல்.
7. கல்விசாரா ஊழியர்களை நேரடியாக பாதித்துள்ள ஆட்சேர்ப்பு மற்றும் பதவியுயர்வு நடைமுறையை சரியானதாக தயாரித்துக் கொள்ளல் மற்றும் ஊழியர் எண்ணிக்கை அறிக்கையை சரியானதாக தயாரித்துக் கொள்ளல்.
8. உதவிச் செயலாளர் / உதவிப் பதிவாளர்/உதவி கணக்காளர் / உதவி நிதியாளர் மற்றும் உதவி உள்ளக கணக்காய்வாளரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடைமுறையை திருத்தியமைத்து வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தை இரத்துச் செய்து முன்னர் காணப்பட்ட வழிமுறைக்கேற்ப மேற்குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவென சுற்றுநிருபத்தை வெளியிடுதல்.
9. பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் 876ம் இலக்க சுற்றுநிருபத்தை இல்லாதொழித்து நாடு பூராகவும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளுக்கு போட்டிப் பரீட்சை நடாத்தி பல்கலைக்கழக முறைமையின் மேம்படுத்தலுக்காக ஊழியர்களை ஆட்சேர்ப்புச் செய்ய நடவடிக்கை எடுத்தல்.
10. கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் பிள்ளைகளை பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு சேர்க்கும்போது முன்னுரிமையை பெற்றுக்கொள்ளல்.
11. கல்விசாரா ஊழியர்கள் என்ற பதத்தினை மாற்றுதல்.
மேற்படி கோரிக்கைகள் குறித்து பல தொழிற்சங்கங்கள் இணைந்த பல்கலைக்கழக தொழிற் சங்கங்களின் கூட்டுக்குழு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளதுடன் இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், உயர்கல்வி அமைச்சர் உட்பட அரசின் உயர் மட்டங்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக் கொள்ளல் சம்பந்தமாக பேச்சுவார்த்தை ஊடாக, கூடிய விரைவில் கால வரையறைக்குள் தீர்த்துக் கொள்வதற்காக சுற்றுநிருபங்களை வெளியிடுவதற்கு உரிய தரப்புகள் தவறுமிடத்து நாடெங்களிலும் உள்ள சுமார் 16000 பல்கலைக்கழக ஊழியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எதிர்காலத்தில் தொடர் வேலை நிறுத்தத்தினை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
