தேர்தல் காலங்களில் பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன் என்று கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர் எம்.ஐ.ஹாமீத் லெவ்வை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நான் ஓட்டமாவடி 2008 B/2 பகுதியில் போட்டியிட்ட போது அந்த பிரதேச மக்கள் அங்கு காணப்படுகின்ற ஹசரத் வீதியை புனர்நிர்மாணம் செய்து தரும்படி என்னிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்தனர். அதை நான் புனர்நிர்மாணம் செய்து தருவதாக அன்று வாக்குறுதியொன்றினை வழங்கி இருந்தேன்.
நான் பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி நீண்டகாலமாக பள்ளமும் படுகுழியுமாக காணப்பட்ட குறித்த வீதியை தற்போது இருபது இலட்சம் ரூபாய் செலவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருகின்றது.
குறித்த வேலைத்திட்டத்தை மேற்கொள்ள நிதி ஒதுக்கீட்டை வழங்கிய முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு, அந்த நிதியுதவியினை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்துதந்த பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அவர்களின் பிரத்தியேக செயலாளரும், கல்குடா தொகுதி சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைப்பாளருமான அன்வர் நெளசாத்திற்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஓட்டமாவடி பிரதேச சபையின் கீழுள்ள நான்கு வட்டாரத்துக்கு முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அவர்களினால் ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.ஹாமீத் லெவ்வை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.