கல்முனை கல்வி வலயத்தின் சாய்ந்தமருது கோட்டத்தின் கீழ் உள்ள சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய மாணவர்களின் உணவு ஒவ்வாமை காரணமாக இன்று (10) 44 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றனர்.
அதில் அதிக மாணவர்கள் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பியுள்ளனர்.
இன்னும் 23 மாணவ, மாணவிகள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
450 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குறித்த பாடசாலையில் கல்வி பயில்வதுடன் சகல மாணவர்களும் குறித்த பாடசாலை உணவகத்திலும், மற்றும் பாடசாலையினாலும் சில வகுப்பு மாணவர்களுக்கு உணவுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது என பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார். திடீரென மாணவர்கள் பலரும் வயிற்று வலிக்கு ஆளானதை தொடர்ந்து வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
பல வருடங்களாக பாடசாலையில் உணவகம் நடத்தி வரும் உசைன் என்பவரின் உணவகத்தில் உணவருந்திய மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். என பரவலாக குற்றம் சாட்டப்பட்டாலும் எதனால் இந்த பாதிப்பு வந்தது என்பதை இன்னும் சரியாக கண்டுபிடிக்கமுடியாமல் உள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாடசாலை உணவகத்தை தற்காலியமாக மூடிவிட்டு மாணவர்கள் சாப்பிட்ட உணவின் பகுதிகளையும், மாதிரிகளையும் பரிசோதனைக்காக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொது சுகாதார பரிசோதகர்கள் எடுத்து சென்று கொழும்புக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்களை சாய்ந்தமருது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் சந்தித்து பேசியபோது அதிகமான மாணவர்கள் தாம் நூடுல்ஸ் மற்றும் உளுந்துவடை சாப்பிட்ட பின்னரே இந்த நிலை எமக்கு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.