உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,
இந்த நாட்டில் இரண்டு நிறைவேற்று அதிகாரங்கள் உள்ளன. ஒன்று ஜனாதிபதி மற்றது பிரதமர். கடந்த காலங்களில் ஜனாதிபதி மட்டுமே முழு அதிகாரம் கொண்டவராக இருந்தார்.
இந்த யதார்த்தத்தை புரிந்தே அமைச்சர் மனோ கணேசன் கன்னியா, நுவரேலியா போன்ற பகுதிகளில் பௌத்த மத அத்துமீறல்களை கட்டுப்படுத்த ஜனாதிபதியை அணுகியுள்ளார். இத்தனைக்கும் மனோ, ரணில் பக்தர். ஐ தே கவின் பாராளுமன்ற உறுப்பினர். ஆனாலும் ரணிலிடம் சென்றால் எதுவும் நடக்காது என்பதை புரிந்து ஜனாதிபதியிடம் சென்றுள்ளார். இதே போன்று முஸ்லிம் அமைச்சர்களால் செயற்பட முடியாமல் போனது ஏன்?
நான்கு வருடங்களுக்கு முன் இறக்காமத்தில் பௌத்த மக்கள் இல்லாத பிரதேசத்தில் சிலை வைக்கப்பட்ட போது ரவூப் ஹக்கீம் தனது தலைவர் ரணிலிடம் ஓடினார். ஒரு வாரத்தில் சிலை எடுக்கப்படும் என ரணில் வாக்குறுதியளித்ததாக கூறினர். இன்று வரை எதுவும் நடக்கவில்லை.
அதே போல் கல்முனை செயலக விடயத்தில் ரணிலின் வாக்குறுதிகளுக்கு அளவே இல்லை என்ற அளவுக்கு முஸ்லிம் எம் பிமார் ஏமாற்றப்படுகின்றனர். இதனால் ஹரீஸ் எம் பி கூட அரசியலே வெறுத்த் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
உண்மையில் முஸ்லிம் எம் பிமார் ஜனாதிபதியுடன் நெருங்கியிருந்தால் முஸ்லிம்களின் பல உரிமைகளை வெல்ல முடியும் என உலமா கட்சி பல தடவை சொல்லியுள்ளது. ஆனால் பிரதமரை திருப்திப்படுத்துவதற்காக முஸ்லிம் சமூகத்தை பலி கொடுத்ததையே கண்டோம்.
இப்போது இருப்பது ஜனாதிபதி, பிரதமர் அதிகார போட்டியாகும். அதனை நாம் பயன்படுத்த வேண்டும். இது விடயத்தில் முஸ்லிம் சமூகமும் தொடர்ந்தும் மடத்தனத்தை செய்கிறது. அதாவது ஜனாதிபதியின் கட்சியுடன் இணைந்து செயற்படும் முஸ்லிம் கட்சிகளை அவை சிறிய கட்சியாக இருந்தாலும் அக்கட்சிகளை ஆதரிக்க முன் வர வேண்டும். அவற்றுடனான சந்திப்புக்கள் மூலம் அவற்றை பலப்படுத்தி ஜனாதிபதி மூலம் பிரச்சினைகளை தீர்க்க முயல வேண்டும். அப்போது பிரதமரும் முண்டியடித்துக்கொண்டு முஸ்லிம்களின் பிரச்சினைகளை பார்ப்பார்.
