கல்முனை உப பிரதேச தரமுயர்த்தல் விடயம் உரிய எல்லை நிர்ணயம் செய்து அடுத்த மூன்று மாதத்திற்குள் தீர்த்துவைக்கப்படுமென சம்பந்தப்பட்ட அமைச்சர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இவ்வுண்ணாவிரதம் நீடிப்பதில் அர்த்தமில்லை. நியாயமற்ற இவ்வுண்ணாவிரதத்தின் காரணமாகத்தான் முஸ்லிம்கள் தொடர்பான நியாயங்களையும் வெளிக்கொணர்வதற்காக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இறங்கவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் இவ்வுண்ணாவிரதத்தை தொடர்ந்தால் அவசரகால சட்டத்தின் அதனை நிறுத்துவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது.
அதாவது, தற்போதைய அவசரகால சட்டத்தின் விதி 14(1) இன்படி, இலங்கையின் ஏதாவது ஒரு பகுதியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் அல்லது காலப்பகுதிக்குள் எவரும் ஒரு பொது வீதியிலோ, பொது மைதானத்திலோ, கடற்கரையோரத்திலோ, ஏதாவது ஒரு கட்டிடத்திலோ அதன் முற்றத்திலோ இருக்கக்கூடாது; என உத்தரவிடலாம்.
14(2): இப்பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பொதுப்பாதை என்பது ஒரு பொதுப்பாலத்தின் மீதான பாதை, பேவ்மன்ட், பாதை ஓரம், வடிகான் என்பவற்றையும் உள்ளடக்கும்.
இதற்கு இன்னுமொரு வர்த்தமானி தேவையில்லை. சாதாரண உத்தரவே போதும். ஆனாலும் ஜனாதிபதி இதனை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்?
இது தொடர்பாக சில முஸ்லிம் கட்சிகளின் உயர்பீட உறுப்பினர்களுடன் உரையாடி அவசரகால சட்டத்தின் மேற்படி விதியைச் சுட்டிக்காட்டி தங்கள் தலைவர்களினூடாக ஜனாதிபதியிடம் பேசுமாறு கூறியிருந்தேன். எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.
முஸ்லிம்களை நசுக்குவதற்கு இன்று பலதரப்பட்ட சக்திகள் முனைப்புக் காட்டுகின்றன. இந்நிலையில் இவ்வுண்ணாவிரதம் தொடர்வது ஆரோக்கியமானதல்ல.
முஸ்லிம்களின் ஒட்டுமொத்த வாக்குகளையும் பெற்ற ஜனாதிபதி ஏன் இவ்வாறு பாராமுகமாக இருக்கின்றார்? இந்த ஜனாதிபதியின் தெரிவுக்காக பங்களிப்புச்செய்த முஸ்லிம் தலைமைகள் ஏன் ஜனாதிபதியுடன் பேசத்தயங்க வேண்டும்?
எனவே, முஸ்லிம் தலைமைகள் அவசரமாக இது தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசி இந்த உத்தரவை விடுக்கவைக்க வேண்டும். அது எதிர்கால இனவாத உண்ணாவிரதங்களுக்கும் ஒரு செய்தியாக அமையும்.