எமது மக்களின் பாதுகாப்பைக் கோருவதில் என்ன தவறு-காரைதீவு தவிசாளர்


காரைதீவு நிருபர் சகா-

மது கிராமத்தின் ஆலயத்தலைவர்கள் அதிபர்கள் பொதுநல அமைப்புகளின் தலைவர்கள் அண்மையில்கூடிய பொதுக்கூட்டத்தில் என்னிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க எமது மக்களின் பாதுகாப்பைக்கோர வேண்டியது எனது தார்மீகக்கடமையும் பொறுப்புமாகும். அதில்; என்ன தவறு இருக்கிறது?

இவ்வாறு காரைதீவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய காரைதீவுபிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கேள்வியெழுப்பினார்.
இவ்ஊடகவியலாளர் மாநாடு பிரதேசசபையின் நூலகக்கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அவருடன் த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர்களான த.மோகனதாஸ் திருமதி சி.ஜெயராணி ஆகியோரும் கலந்து கருத்துரைத்தனர்.

அண்மையில் நடைபெற்ற ஒரு ஊடகமாநாட்டில் தவிசாளர் தெரிவித்த அறிக்கைக்கு உபதவிசாளர் விடுத்துள்ள அறிக்கை தொடர்பில் இவ்வூடகவியலாளர் மாநாடு நடாத்தப்பட்டது.

அங்கு தவிசாளர் ஜெயசிறில் மேலும் கூறுகையில்:
முஸ்லிம்களின் பெயரைவைத்துக்கொண்ட ஒரு பயங்கரவாதக்குழுவினர் செய்த மிலேச்சத்தனமான கொடுரச்செயலுக்கு அனைத்து முஸ்லிம் மக்களையும் குற்றம்சாட்டமுடியாது. யாரும் அப்படிக்குற்றம் சுமத்தவும் இல்லை. நானும் எந்தச்சந்தர்ப்பத்திலும் அனைத்துமுஸ்லிம்களும் பயங்கரவாதிகள் என்று சொல்லவுமில்லை.

அண்மையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச்சம்பவத்தொடரில் 300க்கும் அதிகமான தமிழ்மக்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் இதுவரை எந்தச்சந்தர்ப்பத்திலும் தமிழ்மக்கள் யாருக்கும் தீங்கிழைக்கவில்லையென்பதை சம்பந்தப்பட்டவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
இனவாதம் மதவாதம் பேசி நிம்மதியாக வாழ்ந்த சரித்திரம் உண்டா?

அரசியலுக்காக உபதவிசாளர் அடிமட்டமான தனிப்பட்ட கருத்துக்களை எனக்கெதிராகத் தெரிவித்துள்ளமை அவரொரு அடிமட்டமுட்டாள் என்பதை நிருபிக்கிறது. 

ஒருவரது எதிர்ப்பறிக்கை என்பது நாகரீகமாக கருத்துக்கு மறுதலித்து மறுகருத்து சொல்லப்படவேண்டுமேதவிர தனிப்பட்டரீதியில் யாரும் யாரையும் தாக்குவதென்பது அவரவர் பண்பு தகுதி தராதரங்களை வெளிக்காட்டும். அரசியலுக்காக ஒற்றுமையாகவாழும் தமிழ் முஸ்லிம் மக்களைப் பிரித்து இலாபமடையமுயற்சிக்கும் ஒரு சதியாகவே இதனைப்பார்க்கிறேன். 

எனவே இவர் அரசியலுக்காகப்பேசும் இப்பொய்களுக்கு பின்னால் எனது இனிய இஸ்லாமிய சகோதரர்கள் துணைபோகமாட்டார்களென்பதை நான் நன்கு அறிவேன்.
காரைதீவு 3ஊர்களின் மத்தியிலிருப்பதால்தான் பாதுகாப்பு என்று சொல்வதற்கு இவர் யார்? பயங்கரவாதிகளுக்கும் பேரினவாதக்கட்சியின் முகவரான இவருக்கும் தொடர்புள்ளதா? எனச்சந்தேகிக்கவேண்டியுள்ளது.

எனக்கு அவர் பல்வேறுவழிகளில் கடந்தகாலங்களில் அச்சுறுத்தல் விடுத்துவந்திருக்கிறார்.எனவே எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் இவரே பொறுப்பாளராவார் என்பதை இங்கு பகிரங்கமாகத்தெரிவிக்கிறேன்.

நான் அரிசிபருப்பு கொடுத்து உறுப்பினராகவில்லை.வேலை பெற்றுத்தருகிறேன் எனக்கூறி பல தமிழ்மக்களிடம் லஞ்சம்பெற்று ஏமாற்றுவேலைகளில் திரியவில்லை. அதற்கு சிலர்துணைபோகின்றனர்.

ஆளுநரின் ஷரியா பல்கலைக்கழகம் தொடர்பில் முழுநாடே பேசுகிறது. ஏன் எம்மால் பேசமுடியாது? இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

உறுப்பினர் சி.ஜெயராணி பேசுகையில்:
எமது மக்களால் நேரடியாகத்தெரிவு செய்யப்பட்ட தவிசாளருக்கெதிராக அவதூறான வார்த்தைகளை உள்ளடக்கி கேவலமான அறிக்கைவெளியிட்ட உபதவிசாளரைக் கண்டிக்கிறேன்.

எமதூர் பாதுகாப்பைஎமது தவிசாளர் கேட்காமல் வேறு யார் கேட்பது? அதனைக்கேள்விக்குட்படுத்த உபதவிசாளர் யாhர்?
சபையிலும் அவர் இதுவரைகாலமும் அனைத்திற்கும் முட்டுக்கட்டையாகவே இருந்துவந்துள்ளார். எதனையும் இனவாதநோக்கில் பாக்கும் மோசமான பேர்வழியாகவுள்ளார். பெண்களைமதிப்பதில்லை. அவதூறான வார்த்தைகளை சபையிலே பேசுவார்.

எமது சபையில் இரு இனங்களும் உள்ளன. எம்முடன் உள்ள 5முஸ்லிம்சகோதரர்களோடு நாம் சகோதரமாக பாசத்தோடு பழகிவருகிறோம். இவரைத்தவிர ஏனையோர் நன்றாக சகோதரமாகப் பழகுகின்றனர்.இனியாவது அவர் இனவாதத்தை கைவிட்டு ஒற்றுமையாக வாழவேண்டும்.என்றார்.

உறுப்பினர் த.மோகனதாஸ் பேசுகையில்:
காரைதீவில் மக்கள்வாக்குகளைப்பெற்று நேரடியாகத் தெரிவானவர்கள் நாங்கள். நாம் பேரினவாதக்கட்சியின் முகவராக வரவில்லை. த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்களாகத்தெரிவானவர்கள்.

எமது தவிசாளருக் கெதிராக மிகவும்கேவலமாக அறிக்கையை வெளியிட இவர் யார்? இவருக்கு என்ன அருகதையுள்ளது? இவர் எந்தப்பல்கலைக்கழகத்தில் படித்தவர்?

எமதூர் பிரச்சினையை நாம் கையாளாமல் அவரா கையாள்வது? இனிமேலாவது தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதைவிடுத்து நேர்மையான அரசியல்வாதியாக இருக்கப் பழக வேண்டும். அரசியலுக்காக மக்களைப் பிரிக்க தலைப்படக்கூடாது என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -