Enterprises Sri lanka திட்டத்தை வட்டியில்லா கடன்முறையில் இஸ்லாமிய வங்கியியல் முறையூடாக செயற்படுத்துமாறு கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் மூலமான கோரிக்கையொன்றினை அனுப்பிவைத்துள்ளார்.
அக்கடிதத்தில் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற புதிதாக ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்க தங்களின் எண்ணக்கருவில் செயற்படுத்தப்படும் Enterprises Srilanka திட்டமானது நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் சிறப்பான திட்டமாகும்.இத் திட்டத்தின் மூலம் கடன் பெற்று சுய தொழில்களை ஆரம்பிக்க மக்கள் மிகவும் விருப்பமுள்ளவர்களாக இருக்கின்றார்கள். இருந்த போதும் இத்திட்டத்தின் பயனை முஸ்லிம் மக்கள் அடைந்து கொள்ள முடியாமலுள்ளது.காரணம் இத்திட்டம் வட்டியோடு தொடர்பு பட்டதாகும்.நமது நாட்டின் நீண்ட வரலாற்றில் முஸ்லிம் சமூகமானது நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய பங்காற்றி வந்துள்ளனர் என்பது தாங்கள் அறிந்த விடயமே.தற்பொழுது அரச மற்றும் தனியார் வங்கிகளில் இஸ்லாமிய வங்கியியல் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த Enterprises Sri lanka திட்டத்துக்குள் இஸ்லாமிய வங்கியியல் நடைமுறையையும் உள்வாங்கினால் முஸ்லிம் மக்கள் அதிக பயனை அடைவார்கள். ஆகவே இத்திட்டத்தினுள் இஸ்லாமிய வங்கியியல் நடைமுறையையும் உள்வாங்கி செயற்படுத்தி முஸ்லிம் மக்கள் அதிக நன்மையடைந்து நாட்டின் பொருளாதாரமும் செழிப்படைய உதவி செய்யுமாறு தங்களை தாழ்மையாக வேண்டிக்கொள்வதாக முபீன் மேலும் தெரிவித்துள்ளார்.
இக்கடிதமானது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம்,நிதியமைச்சர் மங்கள சமரவீர,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் ஆகியோருக்கும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா மற்றும் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா ஆகிய நிறுவனங்களுக்கும் பிரதியிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.