கடந்த சுனாமி காலத்தின் பின்னர் மேர்ளின் நிறுவனத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட காத்தான்குடி பாலமுனை பிரதேச வைத்தியசாலையானது இன்றுவரை மக்களுக்கான சிறந்த சேவையினை வழங்கி சிறப்பாக இயங்கி வருகின்றது.
இருந்தபோதிலும் மிக நீண்ட காலமாக இவ்வைத்தியசாலைக்கு தேவையான அபிவிருத்திப் பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெறாமல் பின்தள்ளப்பட்ட நிலையில் காணப்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் இவ்வைத்தியசாலையின் தேவைப்பாடுகள் தொடர்பாக வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் நபீல், பிரதேச சபை உறுப்பினர் அன்சார் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் ஒன்றாக இணைந்து முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளருமான பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்களிடம் வைத்தியசாலையின் தேவைப்பாடுகள் தொடர்பில் பலதரப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இது விடயமாக கவனம் செலுத்திய முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் சிப்லி பாறுக் வைத்தியசாலையின் தேவைப்பாடுகள் தொடர்பாக சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதன் பயனாக பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களின் முயற்சியினால் இவ்வருடம் இவ்வைத்தியசாலைக்கு முதற்கட்டமாக ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்வதற்கான நடவடிக்கைகளை சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் மேற்கொண்டு மிக விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
அந்த வகையில், மன்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் அன்சார் அவர்களின் அழைப்பின் பேரில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இன்னாள் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் இவ்வைத்தியசாலையில் தேவையான அபிவிருத்தி மற்றும் பராமரிப்பு பணிகள் தொடர்பான முன்மொழிவுகளை ஆராயும் பொறுட்டு வைத்தியசாலைக்கு நேற்று (23) கள விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
அதன் பின்னர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இன்னாள் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களின் தலைமையில், மன்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் அன்சார், வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் நபீல் உட்பட வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன், வைத்தியசாலை சுற்றுவட்டாரங்களையும் பார்வையிட்டனர்.