சமூக ஆர்வாளர் றுஸ்வின் தெரிவிப்பு
மாகாண தொகுதி எல்லை நிர்ணயக் குழுவின் பரிந்துரைகள் சிறுபான்மையினருக்கு பாதிப்பாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கு சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்பை வெளிக்காட்ட வேண்டும் என பிரபல சமூக ஆர்வாளர் றுஸ்வின் மொஹமட் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சமூக ஆர்வாளர் றுஸ்வின்,
‘மாகாண சபைத் தேர்தல் புதிய முறையில் நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் உறுதியான தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை. இருந்தாலும் புதிய முறையில் நடத்துவதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளையும் இந்த அரசு முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில் 50வீத தொகுதி அடிப்படையிலும் 50 வீதி ஆசன பட்டியல் அடிப்படையிலும் தேர்தலை நடத்த நடவடிக்கைகள் செய்யப்படுகின்றன.
அந்தவகையில், மாகாண தொகுதி எல்லை நிர்ணயம் செய்வதற்காக அமைக்கப்பட்ட எல்லை நிர்ணயக் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை நாளை வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில், இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் சிறுபான்மையினருக்கு பெரும் பாதிப்பாக அமைந்துள்ளதாக அறிய முடிகின்றது.
குறிப்பாக முஸ்லிம்களுக்கும், மலையக தமிழ் மக்களுக்கும் இம்முறைமை பாதிப்பாக அமைந்துள்ளது. எனவே, நாளைய விவாதத்தில் சிறுபான்மை கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகள் என்பன இந்த யோசனைக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டு அதனை நிராகரிக்க வேண்டும். அதேவேளை, இவ்விடயத்தில் சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் - என்றார்.