தமிழை சரளமாக பேச கூடிய தென்னிலங்கையை சேர்ந்த ஒரேயொரு
தலைவரான மைத்திரி குணரட்ணவால் மாத்திரமே தமிழருக்கு தீர்வு!
ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் இணை தலைவர் யாழில் தெரிவிப்பு
தமிழை மிக சரளமாக பேச கூடிய, தமிழ் மக்களுடன் தமிழிலேயே உரையாட கூடிய தென்னிலங்கையை சேர்ந்த ஒரேயொரு தலைவர் சட்டத்தரணி மைத்திரி குணரட்ண மாத்திரமே ஆவார், இவரால் மாத்திரமே தமிழ் மக்களின் உணர்வுகளை உள்ளபடி உண்மையாக புரிந்து தமிழர்களுக்கான தீர்வை பெற்று தர முடியும் என்று ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் இணை தலைவரும், அருணோதய மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமுமான தேசமான்ய டாக்டர் கே. ஆர். ஹிர்சாந் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி அதன் அரசியல் நடவடிக்கைகள், மனித நேய வேலை திட்டங்கள் ஆகியவற்றை யாழ்ப்பாண மாவட்டத்துக்கு விஸ்தரித்து உள்ளது. இந்நிலையில் இக்கட்சியின் தலைவர் மைத்திரி குணரட்ண தலைமையிலான உயர் மட்ட குழு இம்மாவட்டத்துக்கு கள விஜயம் மேற்கொண்டு வந்து உள்ளது.
சமய தலைவர்கள், சமுதாய செயற்பாட்டாளர்கள், சமய பெரியார்கள், ஊடகவியலாளர்கள் போன்றவர்களை இக்குழுவினர் திண்ணை ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேசினர். மைத்திரி குணரட்ணவை சம்பிரதாயபூர்வமாக அறிமுகப்படுத்தி உரையாற்றியபோதே டாக்டர் ஹிர்சாந் இவ்வாறு பேசினார்.
இவர் இங்கு மேலும் பேசியவை வருமாறு:-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமிழை கொன்று பேசுகின்றார். இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழில் பேச தெரியாது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வணக்கம் என்றுகூட தமிழில் பேசவே மாட்டார். ஆனால் தமிழை மிக சரளமாக பேசி, தமிழ் மக்களுடன் தமிழிலேயே உரையாட கூடிய ஒரேயொரு தென்னிலங்கை தலைவராக சட்டத்தரணி மைத்திரி குணரட்ண மாத்திரமே காணப்படுகின்றார். எனவே இவரால்தான் தமிழ் மக்களின் பிரச்சினைகளை உள்ளபடி உண்மையாக புரிந்து தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்று தர முடியும்.
யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு தசாப்த காலம் ஆகின்றது. ஆனால் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளும் சரி , அடிப்படை பிரச்சினைகளும் சரி முடிவுக்கு வருவதாக இல்லை. அரசாங்கம் தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்குவதாக இல்லை. அதே போல தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்று கொடுப்பதாக இல்லை. இரு தரப்பினர்களுமே தீர்க்க கூடிய இப்பிரச்சினைகளை தீர்க்க முடியாத பிரச்சினைகளாக நீடிக்க வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர். ஆனால் உண்மையில் தமிழர் பிரச்சினையை தீர்த்து வைக்க வெறும் 06 மாத காலம் போதுமானது.
நல்லாட்சி அரசாங்கத்தை தமிழ் மக்களே கொண்டு வந்தார்கள். ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் பதவி காலத்தின் பெரும்பகுதி முடிவுக்கு வந்து விட்ட பிற்பாடுகூட தமிழ் மக்களுக்கு எந்த நல்ல விடயமும் இவ்வாட்சியில் இடம்பெற்றதாக் இல்லை. யுத்தத்தில் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது? என்பது இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை. அவர்கள் உயிருடன் உள்ளனரா? இறந்து விட்டனரா? தடுத்து வைக்கப்பட்டு உள்ளனரா? என்பதை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். அவர்கள் உயிருடன் இல்லை என்றால் அவர்களின் குடும்பத்துக்கு இறப்பு சான்றிதழும், நஷ்டஈடும் வ்ழங்கி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். சர்வதேச போர் குற்ற விசாரணை தேவையா? இல்லையா? என்பதற்கு அப்பால் அதன் பெயரில் அரசாங்கம், தமிழ் அரசியல்வாதிகள் ஆகியோரால் மாத்திரம் அன்றி ஐக்கிய நாடுகள் சபையாலும் தமிழர்கள் ஏமாற்றப்படுவதுதான் ஐ. நா. மனித பேரவை கூட்டத்தில் ஒவ்வொரு வருடமும் நடந்தேறுகின்றது. அரசாங்கத்துக்கு கால அவகாசம் நீடித்து கொடுக்கப்பட்டு கொண்டே இருக்கின்றது. பொது மக்களின் காணிகள் விடுவித்து கொடுக்கப்படுகின்றபோதிலும் அக்காணிகளை பல வருட காலங்களாக பிடித்து வைத்திருந்ததற்கு வாடகையோ, நஷ்டஈடோ அரசாங்கத்தால் வழங்கப்படுவதாக இல்லை.அதை செய்வதை விடுத்து காணிகளை மீள கையளிப்பதை அரசாங்கம் பெருவிழாவாக கொண்டாடுவது சுத்த அபத்தம் ஆகும்.
பாராளுமன்ற எதிர் கட்சி தலைவர் பதவி வட மாகாணத்துக்கு உரியதாக இன்று உள்ளது. இது பிரதமர் பதவிக்கு இணையானது ஆகும். எதிர் கட்சி தலைவர் சம்பந்தன் ஐயா நினைத்தால் எதையும் தமிழ் மக்களுக்கு பெற்று கொடுக்க முடியும். சம்பந்தன் ஐயா கேட்டால் எதையும் கொடுப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தயாராக உள்ளார். அதே போல வட மாகாண முதலமைச்சர் ஓய்வு நிலை நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரனும் எத்தனையோ விடயங்களை முதலமைச்சர் பதவி ஊடாக தமிழ் மக்களுக்கு செய்து கொடுக்க முடியும். இங்கு உள்ளவர்கள் தமிழ் மக்களுக்கு எதையும் செய்கின்றார்கள் இல்லை என்பதை யதார்த்தத்தில் கண்டு கொண்டுதான் நாம் வெளியில் இருந்து வந்து உள்ளோம். இங்கு உள்ள அரசியல்வாதிகள் மக்களுக்கு வேண்டியவற்றை செய்து கொடுத்து இருந்தால் நாம் வெளியில் இருந்து வந்திருக்க மாட்டோம்.
நாம் ஏனைய அரசியல்வாதிகளை போல வாய் ஜாலம் காட்ட மாட்டோம். சொல்வதை செய்வோம். செய்வதை சொல்வோம். எமது கட்சி ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலத்துக்குள்ளே கணிசமான மக்கள் செல்வாக்கை பெற்று உள்ளது. கடந்த உள்ளூராட்சி தேர்தலில் எமக்கு 23 ஆசனங்கள் கிடைத்து உள்ளதுடன் பல சபைகளிலும் தீர்மானிக்கின்ற சக்தியாக நாமே இருக்கின்றோம். வர உள்ள வட மாகாண தேர்தலில் எமது கட்சி நிச்சயம் போட்டியிடும். இம்மாகாணத்தை சேர்ந்தவர்கள்தான் எமது கட்சியில் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள். சிறிய கட்சிகளுக்கு வாய்ப்பானதாக தேர்தல் முறைமை அமைந்து இருப்பதால் ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியாக நாம் மக்கள் ஆதரவுடன் மிளிர அநேக வாய்ப்புகள் உள்ளன. வட மாகாண சபை ஊடாகவே தமிழ் மக்களின் பிரச்சினைகளில் 80 சதவீதமானவைகளுக்கு நிச்சயம் தீர்வை பெற்று கொள்ள முடியும்.