= சொல்லின் செல்வர் இரா. செல்வவடிவேல் ஆவேசம்=
பௌத்த சாசனத்தை பாதுகாக்கின்ற அமைச்சை முஸ்லிம் ஒருவருக்கு நல்லாட்சி அரசாங்கம் வழங்குமா? என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சி முக்கியஸ்தரும், யாழ். மாநகர சபை உறுப்பினரும், இந்து சமய சொற்பொழிவாளருமான சொல்லின் செல்வர் இரா. செல்வவடிவேல் வினவி உள்ளார்.
இந்து சமய விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டு இருப்பதை வன்மையாக கண்டித்து நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையிலேயே இவர் இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.
இவர் இவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டு உள்ளவை வருமாறு:-
பௌத்த சாசனத்தை பாதுகாக்கின்ற அமைச்சை எந்தவொரு தென்னிலங்கை அரசாங்கமும் முஸ்லிம் ஒருவருக்கு வழங்கவே மாட்டாது. அதே போல இஸ்லாமிய சமயத்தை பாதுகாக்கின்ற அமைச்சு எந்த சூழலிலும் முஸ்லிம் அல்லாத ஒருவருக்கு வழங்கப்படவே மாட்டாது. ஆனால் இந்து சமயத்தை பாதுகாக்கின்ற அமைச்சை மாத்திரம் விசித்திரமான முறையில் நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம் ஒருவரிடம் கையளித்து உள்ளது. இது இயற்கை நீதிக்கு புறம்பான விடயமும் ஆகும். மேலும் இது இந்து சமயத்தின் இருப்பை அசைத்து பார்க்கின்ற விடயமாகவே தமிழ் மக்களால் பார்க்கப்படுகின்றது.
இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்ற வகையிலேயே காதர் மஸ்தானை இந்து சமய விவகார பிரதி அமைச்சராக நியமித்து இருப்பதாக நல்லாட்சி அரசாங்கம் காரணம் கற்பிக்க முயலாம். தேசிய நல்லிணக்கம் மொழி ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டியதாகவே இந்நாட்டில் உள்ளது. மற்றப்படி இவ்விசித்திரமான நியமனம் தேசிய நல்லிணக்க முயற்சிகளுக்கு விபரீதமானதாகவே அமைந்து உள்ளது என்பது திண்ணம் ஆகும்.
முஸ்லிம் ஓருவரால் இஸ்லாம் அல்லாத சமயத்தை பாதுகாக்கின்ற, மேம்படுத்துகின்ற அமைச்சராக செயற்படவே முடியாது. அதை அவரிடம் நாம் எதிர்பார்க்கவும் இயலாது. பெயரளவிலான அமைச்சராகத்தான் அவர் காணப்படுவார். எனவே மஸ்தானை இந்து சமய விவகார பிரதி அமைச்சர் பதவியில் இருந்து நல்லாட்சி அரசாங்கம் உடனடியாக நீக்க வேண்டும்.