உலக நாடுகளில் பிரபல்யமானவர்களால் எழுதப்பட்ட பல்வேறு வகையான தொகுப்புக்களைக் கொண்ட பிக்பேட் வோல்ப் 2018 பாரிய புத்தகக் கண்காட்சியும், விற்பனையும் கல்வி அமைச்சின் அனுசரணையுடன் கொழும்பு-10 டி.ஆர். விஜயவர்த்தன மாவத்தையில் உள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் புறோறீட் லங்கா தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் நிஷான் வசலதந்திரி தலைமையில் நேற்று (27) ஆரம்பமானது.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கலந்து கொண்டு கண்காட்சியையும், விற்பனைக் கூடத்தையும் ஆரம்பித்து வைத்தார். இதன்போது பிக்பேட் வோல்ப் நிறுவுனரும் முகாமைத்துவப் பணிப்பாளர் அன்ட்ரூ யாப், நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜக்குளின் நெக், தீபக் மாதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிரந்தனர்.
இலங்கையில் இரண்டாவது தடவையாக நடைபெறும் இந்த மாபெரும் புத்தக கண்காட்சியிலும், விற்பனையிலும் ஆங்கில மொழியிலான 25ஆயிரம் வகையான சுமர் 1.5 மில்லியன் புத்தகங்கள் காட்சிப்படுத்தி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதுடன் 60 தொடக்கம் 80 சதவீதம் வரையான விலைத் தள்ளுபடிகளுடன் பயனாளிகள் பெற்றுக் கொள்ள முடியும்.
பயனாளிகளின் நலன் கருதி எதிர் வரும் ஜூலை 8ஆம் திகதி வரை 24 மணிநேரமும் இது திறந்திருக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், எழுத்தாளர்கள், கலை ஆர்வங் கொண்டவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பட்டவர்களுக்கும் பயனுள்ளதாக இது அமையும். ஆரம்ப தினத்திலேயே ஆயிரக்கணக்கானவர்கள் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.