இம்முறை நோன்புப்பெருநாளையிட்டு ஏறாவூர் ஆற்றங்கரையோர பொதுமைதானத்தில் களியாட்டங்களை நடாத்துவதற்கு முற்றாக தடை விதிக்க ஏறாவூர் நகர சபை மாதாந்த அமர்வில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் அங்காடி வியாபாரங்களை மாத்திரம் நடாத்துவதற்கான கடைத்தொகுதிகள் அமைப்பதென்றும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
நகர சபை அமர்வு முதல்வர் ஐ. அப்துல் வாசித் தலைமையில் நடைபெற்றது. இதன்போது இம்முடிவு எடுக்கப்பட்டது.
கடந்தகாலங்களில் பொது மைதானத்தில் நடைபெற்ற பெருநாள் களியாட்டத்தின்போது ஆண்களும் பெண்களும் கலக்கக்கூடிய வகையில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணான பல செயற்பாடுகள் இடம்பெற்றதனால் எதிர்நோக்கிய விமரிசனங்களைக் கருத்திற்கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்தகாலங்களில் ஜம்இய்யத்து உலமா சபை மற்றும் பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் உள்ளுராட்சி மன்றத்திற்கு வழங்கிய ஆலோசனை மீறப்பட்ட நிலையில் களியாட்டங்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இங்கு நிறைவேற்றப்பட்ட மேலும் பல தீர்மானங்கள் வருமாறு- மர்ஹும் எம்எச்எம். அஷ்ரப் வீதியை உடனடியாக புனரமைப்புச்செய்தல், புளியடி மற்றும் கருமாரியம்மன் வீதிகள் உள்ளிட்ட பல வீதிகளுக்கு மின்விளக்ககளை பொருத்துதல், மையவாடியினை சிரமதானப்பணிமூலம் சுத்தம் செய்தல் மற்றும் வெற்றுக்காணிகளை சுத்தம் செய்வதற்கு உரிமையாளர்களுக்கு கண்டிப்பான அறிவிப்புச்செய்தல் போன்றனவாகும்