யாழ்ப்பாணத்தில் 7 நாட்களாக நடைபெற்ற முதலாவது சர்வதேச சித்த மாநாடு மற்றும் கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வு (27) யாழ்ப்பாண சித்த பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் சித்த மருத்துவப் பிரிவும், வட மாகாண ஆயுர்வேத திணைக்களம் மற்றும் இந்தியா அரசாங்க ஆயுஸ் அமைச்சும் இணைந்து இந்த சர்வதேச சித்த மாநாடு மற்றும் கண்காட்சியினை நடாத்தி வைத்ததில் தேசிய ரீதியிலுள்ள சித்த, யுனானி, ஆயர்வேத வைத்தியர்களினால் மிகக் கூடுதலான ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த மாநாட்டின் இறுதி தினமான நேற்று செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி ஆர்.ஸ்ரீதரின் கிழக்கு மாகாணத்திலுள்ள சித்த, யூனானி, ஆயுர்வேத வைத்தியசாலைகளின் நிலைமைகள் பற்றியும், கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி தொடர்பில் விரிவான தகவல்கள் கொண்ட கட்டுரையை சமர்ப்பித்து உரையாற்றினார்.
அத்துடன் கிழக்கு மாகாண யூனானி வைத்தியர்கள் சார்பில் அட்டாளைச்சேனை தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே.எம்.அஸ்லம் ஆய்வுக் கட்டுரையையும் சமர்ப்பித்து அதுதொடர்பில் மிக விரிவான விளக்கம் அடங்கிய உரையினை உரையாற்றினார்.
இந்த மாநாட்டில் இடம்பெற்ற சித்த வைத்தியம் தொடர்பான கண்காட்சியை பார்வையிடுவற்காக வட மாகாணத்திலுள்ள பல்லாயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டு அதை பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
