அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நண்பகல் 12 மணியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 08 உள்ளுராட்சி மன்றத்திற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன.
அதனைத் தொடர்ந்து ஒன்றரை மணிநேரம் ஆட்சேபனை நேரம் வழங்கப்பட்டதை அடுத்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான எம்.உதயகுமார் ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்தினார்.
இதில் மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சுசீலனும் இணைந்திருந்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் 08 உள்ளுராட்சி மன்றத்திற்கான வேட்பு மனு கோரிய அறிவித்தல் டிசம்பர் 04 ஆம் திகதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனு ஏற்கும் நடவடிக்கைகள் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்று (21) 12 மணியுடன் நிறைவுபெற்றது.
இக்காலப்பகுதியில் 81 வேட்பு மனுக்கள் கிடைக்கப்பெற்றன.
அது தொடர்பான முடிவுகள் சபை ரீதியாக அறிவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபைக்கு 12 கட்சிகளும் ஐந்து சுயேட்சைக் குழுக்களுக்கு 17 வேட்பு மனுக்கள் கிடைக்கப்பெற்றன.
அவற்றில் 16 ஏற்றுக்கொள்ளப்பட்டு 01 வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
அகில இலங்கை தமிழ் காங்கிரசின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
வேட்பாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி நகரசபைக்கு 08 கட்சிகளும் 03 சுயேட்சை குழுக்களும் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்த நிலையில் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்காக 09 கட்சிகளும் ஒரு சுயேட்சைக்குழுவும் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்ததுடன் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபைக்கு 09 கட்சிகளும் 02 சுயேட்சைக் குழுக்களுமாக 11 வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்றன.
அவற்றில் பத்து வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஒரு வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
தேசிய மக்கள் கட்சியின் வேட்பு மனு பெண் பிரதிநிதித்துவம் குறைவாக இருந்தமையினால் நிராகரிக்கப்பட்டது.
மண்முனை தென் எருவில் பற்றுக்கு ஐந்து கட்சிகளும் 01 சுயேட்சைக்குழுவும் வேட்பு மனுக்களை சமர்ப்பித்திருந்தது.
06 வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
