புல்மோட்டைமுதல் பொத்துவில் வரையுள்ள பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்களை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து நின்று கைப்பற்றும் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்,
முஸ்லிம் காங்கிரஸின் வெற்றியை உறுதிப்படுத்த முஸ்லிங்கள் தமது உரிமைகளை வென்றெடுக்கும் ஒரே கட்சியின்கீழ் ஒற்றுமைப்பட்டு ஒன்றிணைய வேண்டுமென கட்சியின் பிரதித் தலைவர் நசீர் அஹமட் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் வியூகங்கள் குறித்து ஊ்டகங்களுக்கு கருத்து வௌியிடுகையிலேயே அவர் இதனைக்கூறினார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர்அஹமட்,
ஏனைய கட்சிகளை வெற்றிபெறச் செய்வதன் ஊடாக முஸ்லிங்கள் பெரும்பான்மைக்கட்சிகளையே வெற்றி பெறச் செய்யப் போகின்றனர்,
ஏனெனில் அகில மக்கள் காங்கிரஸ் எனும் கட்சி உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினூடாகவே வாக்கு கேட்கின்றனர்,
அமீர் அலிக்கோ மஹ்ரூப்புக்கோ நீங்கள்அளிக்கின்ற வாக்கு ஐக்கியத் தேசியக்கட்சிக்கு அளிக்கும் வாக்காகும் ,இதன் மூலம் முஸ்லிங்களுக்கு கிடைக்கின்ற நன்மை என்ன???
ஆனால் அவர்கள் தமக்கான இலாபங்களையே ஈட்டிக் கொள்வார்கள்,
அதே போன்று தேசிய காங்கிரஸ் கட்சியினர் தமது வாக்குகளைப் பெற்று மாயக்கல்லி மலையில் சிலைவைக்க முன்னின்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் வீரசேகர போன்றோருக்கே தாரை வார்க்கப் போகின்றனர்,
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கோ அல்லது சுபைருக்கோ அளிக்கும் வாக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியையே பலப்படுத்தும்.
அதனால் நம் சமூகத்துக்கு கிடைக்கப்போகும் பலன் என்ன??
ஆகவே இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிழக்கின் பிரதேச சபைகள் ,நகர சபைகள் மற்றும் மாநகர சபைகளை வென்றெடுக்க முஸ்லிங்கள் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசோ அல்லது தேசிய காங்கிரஸோ நமக்கு சவால் அல்ல என்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டும்,
மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களினால் எம் சமூகத்தின் விடுதலைக்காய் உருவாக்கப்பட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களித்து அதனைப் பலப்படுத்துவதற்கான கடமை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்கின்றது.
கட்சியுடன் முரண்பாடுகள் இருக்கலாம் அவற்றை நாம் கட்சிக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளமுன்வர வேண்டும்,
முகத்துடன் பகைத்து நாம் மூக்கை அறுக்க முடியாது,
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வௌியேறிய எமது கட்சியின் மீது என்றும் பற்றுள்ள முன்னாள் செயலாளர் நாயகம் ஹசன் அலி போன்றோர் மீண்டும் எமது கட்சிக்குள் வர வேண்டும்.
இப்போது நாட்டில் மிகவும் தீர்மானம்மிக்க தருணம் ,நாட்டின் முஸ்லிங்களின் எதிர்காலத்தையும் இருப்பையும் தீர்மானிப்பதற்கான அரசியல் யாப்பிற்கான முஸ்தீபுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆகவே இந்தக்காலகட்டத்தில் முஸ்லிங்கள் தமது தனித்துவக் கட்சியான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பலப்படுத்த வேண்டிய தேவையுள்ளது,
ஏனெனில் கிழக்கில் முஸ்லிங்களாகிய நாம் பிரிந்து நின்று தமது பிடிமானத்தை விட்டுக் கொடுப்போமாயின் நாம் அதிகாரங்களை இழந்து கைசேதப்படும் சமூகங்களாக மாறுவோம் என்பது திண்ணம்.
இந்தக் கட்சி தனிப்பட்ட நபரினதோ தனிப்பட்ட குழுவினரதோ கட்சி அல்ல,ஒட்டு மொத்த முஸ்லிங்களினதும் உரிமையை வென்றெடுப்பதற்கான ஒரேகட்சி ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசே என்பதை நாம் நினைவிலிருத்திக் கொள்ள வேண்டும்,
இந்தத் தேர்தலை வெற்றிக் கொள்ள ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என அனைவரும் முன்னின்று உழைக்க வேண்டும்,
கட்சிக்கு தேவைப்படின் பாராளுமன்ற உறுப்பினர்களோ மாகாண சபை உறுப்பினர்களோ யாராக இருந்தாலும் இந்தத் தேர்தலை வெற்றிக் கொள்வதற்கு தமது பதவியைத் தியாகம் செய்தேனும் தேர்தலில் குதித்து கட்சியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.
இந்தக் கட்சி தான் எமது சமூகத்தின் அடையாளம் அதற்காய் நாம் எந்தத் தியகத்தை செய்தேனும் கிழக்கில் நம் பலத்தை உலகிற்கு காட்ட முன்னின்று உழைக்க வேண்டும் என கிழக்கின்முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.