கட்சித்தலைமையகத்தில் நடை பெற்ற கூட்டத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது,
வடக்கும் கிழக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம்களின் பாரம்பரிய பிரதேசமாகும். ஒற்றுமையாய் இரு இனங்களும் வாழ்ந்த இம்மாகாணங்களில் 1960களில் இருந்து முரண்பாடுகள் தோற்றம் பெற்றன. இதற்கு தமிழ் தரப்பில் இருந்த தேசிய தலைமைகளும் பிராந்திய முஸ்லிம் தலைமைகளும் விட்ட சில பிழைகளே காரணமாக இருந்தன. ஆனாலும் இவை இரு இனங்களுக்குமிடையிலும் வைராக்கியமாக மாறவில்லை.
பின்னர் ஆயுத போராட்டம் ஈழ விடுதலை ஆயுத போராட்டம்ஆரம்பித்த போது கிழக்கு மாகாண முஸ்லிம்கள் பெரும்பாலும் செல்வந்தர்களாக இருந்த காரணத்தினால் ஆயுத இயக்கங்கள் அவர்களை பயமுறுத்தி கப்பம் பறிக்க ஆரம்பித்ததுடன் ஆரம்பமான தமிழ் முஸ்லிம் உறவின் விரிசல் இன்று வரை தொடர்கிறது.
இதனை எப்படி தீர்க்கலாம் என்பதற்கு அவ்வப்போது ஒவ்வொருவரும் ஊடகங்களில் கருத்து சொல்கிறார்களே தவிர முஸ்லிம் சமூகத்தில் அரசியல் செய்யும் கட்சிகளும் தமிழ் கட்சிகளும் ஒன்றாக இருந்து இது வரை பேச்சுக்களை ஆரம்பிக்கவில்லை.
முஸ்லிம் காங்கிரசை திருப்திப்படுத்தி விட்டால் கிழக்கு முஸ்லிம்களை இணைப்பின் பால் கொண்டு வரலாம் என தமிழ் கூட்டமைப்பு நினைப்பது தவறானது. முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு முஸ்லிம்களின் வாக்கு பெற்ற கட்சியாக இருப்பினும் அதன் தலைவர் கிழக்குக்கு வெளியே உள்ளவர் என்பதாலும் அக்கட்சிக்கு முஸ்லிம்கள் உணர்வுகளால் உந்தப்பட்டு வாக்களிக்கிறார்களே தவிர அறிவுப்பூர்வமாக சிந்தித்து வாக்களிக்கவில்லை என்பதும் தெளிவான விடயம். அத்துடன் அக்கட்சிக்கு வாக்களித்த மக்களில் 95 வீதமானோர் அக்கட்சியின் வடக்கு கிழக்கு இணைப்புக்கான சமிக்ஞையை ஏற்றுக்கொள்ளவில்லை.
உலமா கட்சியை பொறுத்த வரை எக்காரணம் கொண்டும் வடக்கும் கிழக்கும் இணைக்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளோம். காரணம் முன்னர் ஆயுத பலத்தில் கிழக்கு முஸ்லிம்கள் அடிமையாக வாழ்ந்த அனுபவத்தை புறந்தள்ளி விட்டு இது விடயத்தை பேச முடியாது.
ஆயுத கலாசாரம் முடிவுற்று தமிழ் கூட்டமைப்பு இந்த அரசின் பங்காளி என்ற சிறிய அதிகாரத்தை வைத்துக்கொண்டு மீண்டும் கிழக்கு முஸ்லிம்களை மிரட்டுவதை நாம் காண்கிறோம். இந்த நிலையில் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டால் மிகப்பெரிய பாதாளத்தில் முஸ்லிம் சமூகம் விழும் என்பது கற்பனை அல்ல, நிதர்சணம்.
எம்மை பொறுத்த வரை வடக்கையும் கிழக்கையும் இணைத்து விட்டு தனியலகு, தென் கிழக்கு அலகு என்பவற்றை நாம் முற்றாக மறுக்கிறோம். அது கிட்ணியை விற்று சீனி மிட்டாய் வாங்குவது போன்றது என்பதே எமது தெளிவான நிலைப்பாடு. ஆனாலும் கிழக்கில் உள்ள தமிழர் பெரும்பான்மை பிரதேசங்களை வடக்குடன் இணைக்கலாம் என்பதையும் சிங்களவர் பெரும்பான்மை பிரதேசங்களை சிங்கள பெரும்பான்மை மாகாணங்களுடன் இணைத்து விட்டு ஏனைய கிழக்கு மாகாணம் கிழக்காகவே இருக்கட்டும் என்பதை ஒரு தீர்வாக உலமா கட்சி முன் வைத்து வருகிறது. இது விடயத்தை தமிழ் கூட்டமைப்புடன் பேசுவதற்கு நாம் தயார் என தமிழ் கூட்டமைப்புக்கு நாம் கடிதம் அனுப்பிய போதும் அது கருத்திற்கொள்ளப்படவில்லை.
ஆகவே திரு. சம்பந்தன் போன்றோர் இணைப்பு விடயத்தை வெறுமனே பேசிக்கொண்டிருப்பதை விடுத்து முஸ்லிம் காங்கிரஸ் அல்லாத முஸ்லிம் கட்சிகள் அனைத்தையும் ஓரிடத்தில் அழைத்து இது சம்பந்தமாக ஒளிவு மறைவின்றி பகிரங்கமாக பேச நடவடிக்கை எடுப்பதே இன்றைய தேவை என்பதை சொல்லி வைக்கிறோம்.
