அக்கரைப்பற்று வலய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கவும்: அதிகாரிகளுக்கு ஆளுநர் உத்தரவு
கிழக்கு மாகாண சபையினால் வழங்கப்படவுள்ள பட்டதாரி ஆசிரியர் நியமனத்தின் போது அக்கரைப்பற்று வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புமாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகல்லாகம உத்தரவிட்டுள்ளார்.
அக்கரைப்பற்று வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் கோட்டப் பாடசாலைகளில் நீண்டகாலமாக நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்குமுகமாக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநரை அவரது அலுவலகத்தில் சந்தித்து மேற்படி ஆசிரியர் பிரச்சினையை தீர்க்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை அக்கரைப்பற்று வலயத்திற்குட்பட்ட. பொத்துவில் கோட்டத்தில் 115ஆசிரியர் வெற்றிடங்களும், அக்கரைப்பற்று கோட்டத்தில் 70வெற்றிடங்களும், அட்டாளைச்சேனை கோட்டத்தில் 90ஆசிரியர் வெற்றிடங்களுமாக பழைய சுற்றுநிருபத்தின்படி அக்கரைப்பற்று வலயத்தில் மொத்தமாக 275ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படவதாகவும் உதுமாலெப்பை ஆளுநரிடம் சுட்டிக்காட்டினார்.
இதுதொடர்பில் கவனத்திற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம பட்டதாரி ஆசிரியர் நியமனத்தின் போது முன்னுரிமை வழங்கி அக்கரைப்பற்று வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பிரச்சினையை தீர்ப்பதாகவும் உறுதியளித்திருந்தார்.
இதற்கினங்கவே அக்கரைப்பற்று வலயத்திற்குட்பட்ட மேற்படி கோட்டப்பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புமாறு ஆளுநர் கல்வி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
