ஏறாவூர் ஏஎம் றிகாஸ்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட்டுப்பசளை மற்றும் திரவப்பசளை தயாரிப்பது தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வூட்டும் விசேட வேலைத்திட்டத்தினை மாவட்ட விவசாய திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
இத்திட்டத்தின் அங்குரார்ப்பணநிகழ்வு தொப்பிகல- ஈரளக்குளம் - விற்பனைமடு பிரதேசத்தில் விவசாய போதனாசிரியர் எஸ்.சுதாகரன் தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு வடக்கு விவசாய உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் சோலை சேதனப்பசளையும் அறிமுகம் செய்யப்பட்டது.
இரசாயனப் பசளையின் பயன்பாட்டினைக் குறைத்து சேதனப்பசளை மற்றும் இயற்கைத் திரவப் பசளையைப் பாவிக்கும் நோக்குடன் இப்பசளைகளை உற்பத்தி செய்யும் முறை குறித்து விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது.
அத்துடன் நெல் உள்ளிட்ட தானியப்பயிர்கள் மற்றும் வீட்டுத்தோட்டத்திலும் பூச்சி விரட்டியாக பயன்படுத்தக்கூடிய கற்பூரக்கரைசல் தயாரிக்கும் முறை தொடர்பாகவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் விவசாய விரிவாக்க உத்தியோகத்தர்கள் , பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய உற்பத்தியாளர்கள் சம்மௌன உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.


