குற்றப்பணத்திற்கு பதிலாக சமூக சேவை செய்வதற்கு ஜனவரி மாதம் முதல் இன்று வரை 89 நபர்களை
சமுதாய சீர் திருத்த பணிக்காக வேண்டி திருகோணமலை நீதிமன்றம்
கட்டளை பிறப்பித்துள்ளதாக சமுதாயஞ்சார் சீர்திருத்த உத்தியோகத்தர் எம்.எச்.முபாரக் தெரிவித்தார்.
நீதிமன்றத்தால் வழங்கப்படுகின்ற இரண்டு வருடங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனைக்கு பதிலாக வழங்கப்பட்டு வருகின்ற இந்த சமுதாய சார் சீர்திருத்த கட்ளை கஞ்சா,கசிப்பு,கோடா,சூது, ஹெரோயின்,மற்றும் மதுபோதையில் அநாகரிகமான முறையில் நடந்து கொள்ளல் போன்ற குற்றச்செயல்களுக்காகவே இவ்வாறான சமுதாயஞ்சார் சீர்திருத்த கட்டளை வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸாவினால் ஹெரோயினை தம் வசம் வைத்திருந்த குற்றத்திற்காக திருகோணமலை தலைமைய பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு பத்தாயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டது.
இச்சந்தேக நபரிடம் தண்டம் செலுத்த பணம் இல்லாதவிடத்து பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணத்திற்கு பதிலாக 200 மணித்தியாலங்கள் சமூக சேவை வேலைகளை வழங்குமாறும் நேற்று (13) சமுதாயஞ்சார் சீர்திருத்த பிரிவிற்கு கட்டளையிட்டார்.
இவ்வாறு கட்டளையிடப்பட்டவர் திருகோணமலை,பாலையூற்று பகுதியைச்சேர்ந்த ஜே.கே.ஸ்பாக் (52வயது) எனவும் தெரியவருகின்றது.
அத்துடன் 7500/= குற்றப்பணத்திற்கு பதிலாக 150 மணித்தியாலம் சமூக சேவை செய்யுமாறும் 22 வயதுடைய இளைஞனுக்கு கட்டளையிட்டார்.
அத்துடன் சமுதாயஞ்சார் சீர்திருத்த கட்டளை பிறப்பிக்கப்பட்ட 89 பேரில் 27 பேர் தமது கட்டளைகளை நிறைவு செய்துள்ளதாகவும் அப்பிரிவின் பொறுப்பாளர் எம்.எச்.முபாரக் குறிப்பிட்டார்.
