அப்துல்சலாம் யாசீம்-
கிண்ணியா தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சந்தேக நபரொருவரை பார்வையிட நீதவான் சென்ற போது கடமையில் எவரும் இருக்கவில்லையென தெரிவித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் நேற்று (22) மாலை வைத்தியசாலை பணிப்பாளருக்கு கட்டளையிட்டுள்ளார்.
இச்சம்பவம் கிண்ணியா தள வைத்தியசாலையில் நேற்று (22) புதன்கிழமை மாலை 3.30மணியளவில் இடம் பெற்றுள்ளது.
இச்சம்வம் குறித்து தெரியவருவதாவது- சீனக்குடா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் வீடொன்றிற்குள் புகுந்த துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட நபரொருவரை பொதுமக்கள் நையப்புடைத்ததால் காயமுற்ற அவர் கிண்ணியா தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சந்தேக நபரை நேரில் பார்வையிட்டு விசாரணைகளை செய்வதற்கு திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா குறித்த நபர் சிகிச்சை பெற்று வரும் வாட்டுக்கு சென்ற வேளை அவர் குறித்து விசாரிப்பதற்காக வைத்தியரோ அல்லது தாதியரோ கடமையில் இருக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா கிண்ணியா தள வைத்தியசாலைக்கு சென்ற வேளை கடமையில் எவரும் இருக்காதநிலையில் இது விடயமாக நீதிமன்றத்திற்கு அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறு கிண்ணியா தள வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதவான் கட்டளை பிறப்பித்துள்ளார்.
