அமெரிக்காவில் கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி அல்-குவைதா தீவிரவாதிகள் விமானங்களை கடத்தி நியூயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டடத்தின் மீது மோதி வெடிக்கச் செய்தனர்.
இதில் பயணிகள் உள்ளிட்ட 2,750 பேர் உயிரிழந்தனர். மேலும் அமெரிக்க .ராணுவ தலைமையகமான பென்டகன் மீது மற்றொரு விமானத்தை மோதி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் மொத்தமாக 3,000 பேர் வரை உயிரிழந்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான இரட்டை கோபுரம், நியூயோர்க் மற்றும் நியூஜெர்ஸி துறைமுக கழகத்திற்குச் சொந்தமானது. சம்பவம் நடப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன், சில்லவர்ஸ்டீன் என்பவர் 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்திருந்தார்.
கட்டடத்திற்கு அவர் காப்புறுதி செய்திருந்த நிலையில் தாக்குதலுக்கு பின், சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனத்திடம் இருந்து 30,000 கோடி ரூபாயை இழப்பீடு தொகையாகப் பெற்றார்.
எனினும் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு இரட்டை கோபுர தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட அமெரிக்க எயார்லைன்ஸ் மற்றும் யுனைடெட் எயார்லைன்ஸ் விமான நிறுவனங்கள் மீதும் சில்லவர்ஸ்டீன் வழக்கு தொடர்ந்தார். அந்த முறைப்பாட்டு மனுவில் அவர் 18,9,714 கோடி ரூபாய் இழப்பீடும் கோரி இருந்தார்.
இந்த வழக்கு அமெரிக்க நீதிமன்றங்களில் கடந்த 17 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், 625 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க விமான நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன. இதை சில்லவர்ஸ்டீனும் ஏற்றுக்கொண்டுள்ளதை அடுத்து வழக்கு நிறைவுக்கு வந்துள்ளது.
