உள்ளுராட்சி திருத்த சட்டமூலம் சிறுபான்மை சமூகத்துக்கு கேடு என்றால் பதவிகளை தூக்கியெறிவோம் -அமீர் அலி




ள்ளுராட்சி திருத்த சட்டமூலம் சிறுபான்மை சமூகத்திற்கு பாதிப்பு இருப்பதால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினர் பதவியை துறக்க இருந்த வேலையில் பிரதமர் மற்றும் அமைச்சர் பைசர் முஸ்தப்பா ஆகியோர் வழங்கிய வாக்குறுதியினால் முடிவை மாற்றினோம் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் செம்மண்ணோடைக் கிராமத்தில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலயத்தில் நடைபெற்ற போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.

இருபதாவது திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் வட கிழக்கிலே இருக்கின்ற முஸ்லிம்களுக்கு சாதகமாக இருந்தாலும் விசேடமாக கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம்களுக்கு சாதகமாக இருந்தாலும் வடபுலத்திலுள்ள, வட கிழக்கிற்கு வெளியே உள்ள முஸ்லிம்களுக்கும், மலையகத் தமிழர்களுக்கும், வெளிப் பிரதேசத்தில் வாழும் தமிழர்களுக்கும் அது சாதமாக இல்லை என்பதால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பது என்று தீர்க்கமாக முடிவை எடுத்தது.

இதற்கான சரியான உடன்பாடு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இதற்கு பொறுப்பான அமைச்சர் உறுதியுரை வழங்கவில்லை என்று சொன்னால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இருபதாவது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கும் என்பதை அரசியல் தலைவர்களுக்கு தெரிவித்தோம்.

அதேகால கட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அவரது பாராளுமன்ற உறுப்பினர்களையும் என்னவென்று சொல்ல முடியாமல் காண முடியாமல் இருந்தது. இவர்கள் வாய்மூடி இருந்த சூழலிலே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைமை பாராளுமன்றத்தில் தெளிவாக பேசினார்.

உள்ளுராட்சி திருத்த சட்டமூலம் சிறுபான்மை சமூகத்திற்கு அநேகமாக பாதிப்பு இருக்கின்ற காரணத்தினால் எங்களுடைய அமைச்சு பதவிகளையும் தூக்கி எறிந்து விட்டு செல்வதற்கு தயாராக இருந்த நேரத்திலே பிரதமர் மற்றும் அமைச்சர் பைசர் முஸ்தப்பா ஆகியோர் வழங்கிய வாக்குறுதியினால் மீள் பரிசீலனை செய்து அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கின்ற திட்டத்தில் உள்ளோம் என்பதை அமைச்சர் றிசாட் பதியூதீன் தெரிவித்திருந்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைவர் ரவூப் ஹக்கீம் இக்கட்சி முஸ்லிம்களின் கட்சி என்றும், முஸ்லிம்களுக்கு சொந்தக்காரர் என்றும், முஸ்லிம்களின் உரிமைக்காக போராடுவோம், உரிமையை பாதுகாத்தே தீருவோம் என்று சொன்னவர் பாராளுமன்றத்தில் வாய் மூடி மௌனியாக இருந்தார்.

நாங்கள் சமூகத்தின் மீதும் மக்கள் மீதும் நம்பிக்கை வைத்திருக்கின்றோம். நீங்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றீர்கள். அந்தவகையில் மாகாண மட்டமாக, தேசிய மட்டமாக, கிராம மட்டமாக இருந்தாலும் சரிதான் உங்களுடைய பிரச்சனைகளை இணங்கண்டு அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டுமோ அதிலே நாங்கள் விழிப்பாக இருந்து கொண்டிருக்கின்றோம்.

இந்த நாட்டின் முஸ்லிம்களின் பள்ளிவாயல் பிரச்சரனை, உரிமைப் பிரச்சனை, பொதுபலசேனா பிரச்சனை, காணிப் பிரச்சனை எதுவாக இருந்தாலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையும் குரல் கொடுக்கின்றவர்களாக இருந்து கொண்டிருக்கின்றோம்.

கடந்த காலத்திலே கிழக்கு மாகாண கல்வி அமைச்சு, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோர் எந்த பாடசாலைக்கு தேவையோ அதற்கு தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க தவறிவிட்டார்கள் கல்குடாவில் எந்த பாடசாலைக்கு கட்டுமானம் தேவை என்று அவருக்கு தெரியாது. அவ்வாறு தெரிந்திருந்தால் அவசரமாக தேவையான பாடசாலைக்கு கட்டுமான பணியை செய்திருக்க வேண்டும்.

மத்திய அமைச்சினால் கொடுக்கப்படுகின்ற நிதியை கொண்டு வந்து நாங்கள் கொடுக்கின்றோம் கட்டுகின்றோம் என்று பெயர் வாங்குவதற்காக சண்டித்தனத்திலே போகலாம் என்று நினைக்கின்றார்கள்.

எதிர்வருகின்ற நாட்களிலே இவர்களுக்கெல்லாம் பாடம் படித்துக் கொடுக்கின்ற நாட்களாக, இவர்களுடைய வண்டாவாளங்களை தண்டாவாளங்களில் ஏற்றி வைக்கின்ற நாட்களாக வரப்போகின்ற நிலைமை மிகத் தூரத்தில் இல்லை என்பதை விளங்கிக் கொள்ளுங்கள் என்றார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டாரக் கிளை அமைப்பாளர் எஸ்.சம்மூன் தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வின் போது தையல் பயிற்சியினை முடித்த யுவதிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டதுடன்;, செம்மண்ணோடை தக்வா பள்ளிவாயல் வீதி மற்றும் வாஹித் வீதிகளுக்கு கொங்கிறீட் வீதிக்காக அடிக்கல் நாட்டப்பட்டதுடன் நாகையடி வீதி திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எச்.எம்.றுவைத், தக்வா பள்ளிவாயல் தலைவர் முஸ்தபா ஹாஜி, முன்னாள் ஓட்டமாவடி பல நோக்கு கூட்டுறவுச் சங்க முகாமையாளர் எஸ்.கபூர், கிராம சேவையாளர் எம்.எம்.அன்வர்சதாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -