கொட்டகலை பொரஸ்ட்கிறிக் தோட்ட மக்களின் நலன்கருதி புதிய பாலம் : அமைச்சர் திகாம்பரம் நிதியொதுக்கீடு



நோட்டன் பிரிட்ஜ்  மு.இராமச்சந்திரன்- 

முன்னைய அரசாங்கங்களில் அபிவிருத்தித் திட்டங்களில் பாராபட்சம் காட்டப்பட்ட தோட்டங்களிலும் தற்போது முறையான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு அமைச்சர் திகாம்பரம் உரிய பணிப்புரைகளை வழங்கியுள்ளார் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பணிப்புரைக்கேற்ப 22 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் கொட்டகலை பொரஸ்ட்கிறிக் தோட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் 16.08.2017 கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொரஸ்ட்கிறிக் தோட்டக்கமிட்டித் தலைவர் முனியாண்டி தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாணசபை உறுப்பினர் சிங்.பொன்னையா , தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவர்களான வேலு சிவானந்தன் , ஏ.ராஜமாணிக்கம் ,அட்டன் பிராந்திய இயக்குநர் ஆரோக்கியசாமி , தொழிலுறவு அதிகாரி சிங்கராயர் ,அமைப்பாளர்களான லெட்சுமணன் , ஜெயராம் , பொதுமக்கள் தொடர்பு உத்தியோகஸ்தர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சோ.ஸ்ரீதரன் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :
'கொட்டகலை நகருக்கு அருகிலுள்ள இந்த பொரஸ்கிறிக் தோட்ட மக்களின் நலன் கருதி கடந்த காலங்களில் எவ்விதமான அபிவிருத்தி திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் தொழிலாளர் தேசிய சங்கத்துடன் நீண்டகால தொடர்புள்ளவர்கள். இந்தத் தோட்ட மக்கள் சார்பாக ஹரிராம் என்பவர் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்ட வரலாறொன்றுள்ளது. இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் கொட்டகலை ஓயா ஆற்றைக்கடப்பதற்கு பயன்படுத்தி வந்த தொங்கு பாலம் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற போதும் புதிய பாலமொன்று அமைக்கப்படாத காரணத்தினால் போக்குவரத்துப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தனர். 

இவ்வாறானதொரு நிலையில் புதிய பாலமொன்றின் தேவைப்பாடு குறித்து அமைச்சர் திகாம்பரத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டமையைத் தொடர்ந்து அவர் புதிய பாலமொன்றை அமைப்பதற்கு 22 இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.இந்த நிதியைக் கொண்டு வெகுவிரைவில் புதிய பாலமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.' என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -