இரு மொழிக்கவிஞரும் ஓய்வு பெற்ற ஆசியருமான கல்வீட்டுக் கவிராயர் எம். எச். எம். ஹலீம்தீனின் மறைவு ஆங்கிலக் கவிதைத்துறையில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு கனடா சென்றுள்ள முன்னாள் அமைச்சர் மேலும் அதில் குறிப்பிட்டுள்ளதாவது,
நான் முஸ்லிம் சமய கலாசார அமைச்சராக இருந்த சமயம் (1993) ‘வாழ்வோரை வாழ்த்துவோம்’ விருது வழங்கும் விழாவில் ‘நஜ்முஸ்ஸஹ்ரா’ என்ற (கவிச்சுடர்) பட்டத்தையும் வழங்கி எம். எச். எம். ஹலீம்தீனைக் கௌரவப்படுத்தினேன். இவர் ஆயிரக்கணக்கான கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என எழுதியுள்ளார்.
4 பிள்ளைகளின் தந்தையான இவர், ஒரு பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியருமாவார். எல்லாம் வல்ல இறைவன் ‘மஹ்பீரத்’ எனும் மன்னிப்பை வழங்கி, அவர் குடும்பத்தவர்கள், பிள்ளைகள் அனைவருக்கும் ‘பஸ்ஜித் ஜமீல்’என்ற அழகிய பொறுமையை அளிப்பானாக! அன்னாருக்கு ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சொர்க்கம் கிடைக்கச் செய்வானாக!