சாய்ந்தமருதில் நீண்ட காலமாக இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண காரியாலயத்தை அங்கிருந்து அம்பாறைக்கு இடம்மாற்றுவதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் குறித்த காரியாலயத்தை இடமாற்றக்கூடாது என கூறி அப்பிரதேச இளைஞர் பாராளமன்ற உறுப்பினர்கள் உட்பட இளைஞர் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த இடமாற்றம் தொடர்பாக இளைஞர் பாராளமன்ற உறுப்பினர் பைசர் தில்சாத், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் எரந்திக வேலியங்கவை 2017-07-06 ஆம் திகதி இடம்பெற்ற இளைஞர் பாராளமன்ற உறுப்பினர்களின் முன்றாவது அமர்வின்போது சந்தித்து உரையாடியதன் பயனாக, சாய்ந்தமருதில் இயங்கிவரும் மாகாண காரியாலயம் குறித்த இடத்திலேயே இயங்கும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை தான் எடுப்பதாகவும் வாக்குறுதியளித்ததாக பாராளமன்ற உறுப்பினர் தில்சாத் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் இயங்கிவரும் உயர் காரியாலயங்களை அம்பாறைக்கு மாற்றும் திட்டத்தின் கீழ் குறித்த இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண காரியாலயத்தையும் அம்பாறைக்கு மாற்றுவதற்காக எடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு பிரதேச அரசியல்வாதிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.