மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்) எம்.ரீ.எம்.அஸ்ரப் அவர்கள் கடந்த 07.07.2017ம் திகதியுடன் தனது கல்விச்சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
1957-07-09ம் திகதி பிறந்த முகம்மதுத்தம்பி முகம்மது அஷ்ரப் அவர்கள் தனது ஆரம்பக்கல்வியினை வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியினை ஓட்டமாவடி தேசிய பாடசாலையிலும் கற்று, அதன் பின்னர் உயர்நிலைக் கல்வியினை காத்தான்குடி மத்திய கல்லூரியில் கற்றுள்ளார்.
1977-05-12 ம் திகதி ஆசிரியர் சேவையில் இணைந்து கொண்ட இவர், பிறைந்துரைச்சேனை அரச முஸ்லிம் கலவன் பாடாசாலையில் தனது முதலாவது நியமனத்தைப் பெற்று கடமைப் பொறுப்பெற்றார்.
வவுனியா மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் பணி புரிந்த இவர், அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் கணிதப் பாடத்திக்கான ஆசிரியர் பயிற்சியினையும் பெற்றுக்கொண்டார்.
1989 ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் சேவைப் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த பின்னர், ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் 13 வருடம் ஆசிரியராகவும், பிரதி அதிபராகவும் கடமை புரிந்துள்ளார்.
பொறுப்புள்ள அதிபராக காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயம், ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலயம், வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை ஆகியவற்றில் கடமை புரிந்துள்ளார்.
அத்தோடு, 2013 ம் ஆண்டு தேசிய மாணவர் பயிளலவல் படையணி (NCC) ரந்தெம்ப இராணுவ முகாமில் நடைபெற்ற முதலாம் தர அதிபர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியில் கெப்டன் பதவியினையும் பெற்றுக் கொண்டுள்ளார். சமூக சேவை சிந்தனையுள்ள இவர், கடந்த காலங்களில் ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயலின் இடைக்கால நிருவாக சபையின் செயலாளராகவும் செயலாற்றியுள்ளார். தற்போது ஓட்டமாவடி பாத்திமா சஹ்றா பெண்கள் அரபுக்கல்லூரியின் நிருவாகக்குழு உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றார்.
இலங்கை கல்வி நிருவாக சேவையிலுள்ள இவர், கடந்த மூன்று வருடங்களாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளராக (திட்டமிடல்) தனது கடமைப்பொறுப்புக்களை மிகவும் சிறப்பான முறையில் அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வந்த எம்.ரீ.எம்.அஸ்ரப் அவர்கள், தனது அறுபதாவது வயதில் கடந்த 07.07.2017ம் திகதியுடன் தனது நாற்பதாண்டு கால கல்விச்சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியராக, அதிபராக, பிரதிக்கல்விப்பணிப்பாளராக கடமை புரிந்த இவர், பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியிலும் பாடசாலையின் வளர்ச்சியிலும் தன்னாலான முழுப்பங்களிப்பையும் வழங்கி அதன் முன்னேற்றத்துக்கு அயராதுழைத்துள்ளார்.
குறிப்பாக, இவரது கணிதப்பாடம் கற்பிக்கும் திறன் மாணவர்களுக்கு கணிதப்பாடத்தின் மேல் ஈர்ப்பினை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
சுமார் நாற்பதாண்டு கால கல்விப்பணி புரிந்து ஓய்வு பெற்றுச் செல்லும் பிரதிக்கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.அஸ்ரப் அவர்களின் கல்விச் சேவை என்றும் பேசப்படும். அவருக்கும் அவரது சிறந்த கல்விச் சேவைக்கும் எமது உளப்பூர்வமான வாழ்த்துக்கள்.