20 வருடங்களுக்கு முன்பு இதே நாள் திருகோணமலை- புல்மோட்டை வீதியில், 6 ம் கட்டை எனும் இடத்தில் இனம்தெரியாத கொலை வெறியர்களால், எனது தந்தை M.E.H மஹரூப் அவர்களும், அவருடன் சேர்ந்து தமது இறுதிப் பயணத்தை மேற்கொண்டவர்களான மர்ஹும். லத்தீப் ஆசிரியர், பாதுகாப்பு உத்தியோகத்தர் அஸதுல்லா, சாரதி மன்சூர் மற்றும் அவரது மகன், தந்தையின் ஆதரவாளரான நிந்தவூரைச் சேர்ந்த உதுமான் லெப்பை ஆகியோரது அப்பாவி உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
எனது தந்தை நடந்த புல்லுக்கூட சாகாத மனிதர் என்று பொதுமக்களால் வர்ணிக்கப்பட்டவர். அவ்வாறான மென்மை உள்ளம் கொண்டவர். அரசியலில் வாழ்க்கையில் மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்க்கையிலும் தமது ஆயுள் காலத்தில் எந்தவொரு மனிதரையும் இம்சித்ததோ, முரண்பட்டதோ இடைஞ்சல் கொடுத்ததாகவோ சரித்திரமில்லை. இப்படிப்பட்ட மனித நேயம் கொண்ட ஒருவரைக் கொலை செய்ய பாவிகளுக்கு மனம் வரக்காரணம், கேவலம் அரசியல் சுயலாபமே அன்றி வேறில்லை.
இவ்வாறான அசம்பாவிதம் எதிர்காலத்தில் எவருக்கும் ஏற்படக் கூடாதென வேண்டிக் கொள்ளும் இவ்வேளையில், எனது தந்தையுடன் மரணித்த ஏனைய 5 பேருக்கும் அல்லாஹ் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தில் இடமளிப்பானாக... மேலும், மூதூரின் முத்துக்கள் மூவரான ஜனாப். A,L மஜீத், திரு.அ. தங்கத்துரை மர்ஹும் அல்ஹாஜ். M.E.H மஹரூப் ஆகியோரது உயிர்களும் அரசியல் பழி வாங்கலில் உள்வாங்கப்பட்டதை மிகுந்த வேதனையுடன் நினைவு கூறிக் கொள்வதுடன், மற்றயை இருவரது குடும்ப அங்கத்தவருக்கும் , அவர்களது குடும்பத்தில் பிறவாத மகளாக எனது ஆழ்ந்த அனுதாபங்களை இவ்வேளையில் கூறிக் கொள்கிறேன்.