எம்.ஐ.நெளசாத்-
அக்கரைப்பற்று மகாசக்தி நிறுவனம், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் என்பன அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த அரச மற்றும் அரசு சாரா உத்தியோகத்தர்களை இணைத்து 02.06.2017ம் திகதியான நேற்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் மகாசக்தி கேட்போர்கூட மண்டபத்தில் அதன் தலைவி திருமதி. துளசிமணி மனோகரராஜ் அவர்களின் தலைமையில் இவ்விழிப்புணர்வுச் செயலமர்வு நடாத்தப்பட்டது.
இதன்போது அக்கரைப்பற்று பொலிஸ்நிலையத்தினால் இச்செயற்றிட்டம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக நிலையப் பொறுப்பதிகாரி ஜனாப்.ஏ.எல்.எம்.ஜெமில் அவர்கள் எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ஜனாப். எம்.எஸ்.எம். சியாத் அவர்களினால் அனர்த்தம் என்றால் என்ன? முன்னாயத்த நடைமுறைகள் எவை? போன்ற பல்வேறு விடயங்களும், ஆவணப்படங்களும் பங்குபற்றுனர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டு தெளிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன்போது பங்குபற்றுனர்களால் சில கேள்விகளும் -கருத்துப் பரிமாறல்களும் இடம்பெற்று சந்தேகங்களுக்கான விளக்கமும் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.