ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
திருகோணமலை மல்லிகைத்தீவு பெரியவெளி கிராமத்தில் சிறுமிகள் மூவரை வன்புணர்வுக்குட்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் திங்கட்கிழமை 12.06.2017 கிழக்கு பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாக முன்றலில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
குற்றவியல் சட்டக்கோவையில் பாலியல் குற்றத் தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும், காலத்தைக் கடத்தாது கயவர்களை கைது செய்ய வேண்டும், நீதிமன்றத்தின் சுயாதீனம் காக்கப்பட வேண்டும், சட்டத்தரணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மனித சங்கிலிப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இப் போராட்டத்தில் கிழக்குப் பல்கலைக் கழக தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
மல்லிகைத்தீவு சிறுமிகள் துஷ்பிரயோகம் திருமலை மக்கள் பிரதிநிதிகள் ஏன் மௌனம், குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேரணி நடாத்தும்போது குற்றமிளைக்கப்பட்ட சிறுமிகளுக்காக பேரணி நடாத்த ஏன் தயக்கம்?, வழக்கு விசாரணையை திருகோணமலை நீதிமன்றத்துக்கு மாற்று, நீதி வேண்டும், மல்லிகைத்தீவு சிறுமிகள் துஷ்பிரயோகம் நல்லாட்சி அரசே ஏன் மௌனம், வழக்குத் தீர்பு குற்றவாளிகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களையெழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இங்கு கலைப் பிரிவு மாணவி செல்வி அஜந்தினி வன்னியசிங்கம் கருத்து தெரிவிக்கையியல் - சிறுமிகளுக்கு நடைபெற்ற அநீதிக்கு நிச்சயமாக தண்டனை வழங்கப்பட வேண்டும் இதன் மூலம் இன்னுமொருமுறை சிறுவர்களுக்கோ பெண்களுக்கு எதிரான வன்முறை உருவாகாத வகையில் பாதுகாக்க முடியும்.
சிறவர்களுக்கு எதிராக ஏற்கனவே நடைபெற்ற கொடூரங்களுக்கு தண்டணை வழங்ப்பட்டிருந்தால் இத்தகைய சம்பவம் இடம்பெற்றிருக்காது. கண்மூடித்தனமாக நல்லாட்சியில் அங்கத்தவர்களாக காணப்படும் மக்கள் பிரதிநிதிகள் இதற்கான சிறந்த முடிவை எட்ட வேண்டும். அதன் மூலம் எமது சமூகத்தின் பாரம்பரிய பழக்க வழக்கங்களின் ஊடாக சிறுவர்கள் மற்றும் பெண்களைப் பாதுகாக்க முடியும் என்றார்.