கவிக்கோ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் உலக புகழ்பெற்ற கவிஞரும், தமிழ் பேராசிரியருமான அப்துர் ரஹ்மான் அவர்களின் மறைவு இலக்கிய உலகுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இரங்கல் தெரிவித்துள்ளார். கவிக்கோவின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-
1937இல் தென்னிந்தியாவின் மதுரையில் பிறந்த கவிக்கோ அப்துர் ரஹ்மான் தமிழ் இலக்கிய துறைக்கு அளப்பறிய சேவையாற்றியுள்ளார். 1960க்குப் பின் கவிதை உலகில் வலம் வந்த இவர் கவியரங்க கவிதைகளாலும், வாணம்பாடி இயக்க கவிஞர்களோடு இணைந்து பணியாற்றியதாலும், தமிழ் இலக்கியத் துறையில் தனக்கென தனி இடம் பதித்துக் கொண்டவர்.
சிலேடை வார்த்தைகளால் ஆழமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டதன் மூலம் அனைவரையும் தமது மென்மையான ஆழமான பேச்சால், எழுத்தால் கவர்ந்திழுக்கும் ஆற்றல் படைத்தவராக விளங்கினார். இதனால், அவருக்கு இந்தியாவில் மாத்திரமல்லாது இலங்கை, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் இலக்கிய ரசிகர்கள் ஏராளாமானவர்கள் இருப்பதுடன், அவர்களின் உதாரண புருஷராகவும் உள்ளார்.
புதுக்கவிதை குறியீடு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னை பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சாகித்ய விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற பெருமை இவருக்கு உண்டு. கவிக்கோ நூற்றுக்கணக்கான நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், ஆய்வுகள் மேற்கொண்டு தமிழ் இலக்கியத்திற்கு அளப்பறிய பங்காற்றியுள்ளார். இவரது இழப்பு தமிழ் இலக்கிய உலகுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
எனினும், “விதை போல் விழுந்திருக்கிறார்” அவர் மறைந்தாலும், அவரது கவிதைகள் பாடிக் கொண்டே இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினருக்கும், இலக்கிய உலகத்திற்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். – என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.