எஸ்.ஹமீத்-
கடந்த சில வாரங்களாக பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரரின் இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான ஆட்டம் சூடு பிடித்துக் காணப்படுவதற்குப் பிரதானமான காரணமெனச் சிங்கள புத்திஜீவிகளினால் ஒரு காரணம் முன் வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 24ம் திகதி புதன்கிழமை ஞானசாராவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. ஹோமாகம நீதிமன்றத்துக்குள் அத்துமீறி, வலுக்கட்டாயமாக நுழைந்து சாட்சியொருவரை ஞானசார மிரட்டியிருந்தது சம்பந்தமாக அவர் முன்னர் கைது செய்யப்பட்டுப் பின்னர் பிணையில் வெளிவந்திருந்தார். அந்த வழக்கே மீண்டும் எதிர்வரும் புதன்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த வழக்கிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புகின்ற தந்திரமான நடவடிக்கையாகவே தற்போதைய ஞானசாரரின் துவேஷமான நடவடிக்கையைப் பார்க்க முடிகின்றது என்று சிங்கள புத்திஜீவிகள் மட்டத்திலிருந்து கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
அது மாத்திரமல்லாது, நீதிமன்றத்தினால் ஞானசார சிறைத் தண்டனை போன்ற தண்டனைக்குள்ளாகும் போது, முஸ்லிம்களை எதிர்த்ததன் காரணமாகவே தான் சிறை செல்ல நேர்ந்தது என்று கூறிச் சிங்களக் கடும்போக்குச் சக்திகளின் அனுதாபத்தைத் திரட்டிக் கொள்ளும் நடவடிக்கையாகவும் அவரது தற்போதைய 'துள்ளலைப்' பார்க்க முடியுமென்று புத்திஜீவிகள் கருத்துக் கூறியுள்ளனர்.
மிகப் பெரும்பான்மையான பௌத்த சிங்கள மக்கள் நல்லவர்களென்றும், அவர்கள் இலங்கையிலுள்ள ஏனைய சமூகங்களுடன் நல்லுறவோடு சுமுகமாக வாழ்வதையே விரும்புகிறார்களென்றும், ஆனால் இனவாதத்தை மிக மிகச் சிலரே தங்களது சுயநலன்களுக்காகக் கையிலெடுத்துக் காடைத்தனம் புரிந்து வருவதாகவும் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.