காரைதீவு நிருபர் சகா-
பலகோடிருபா பெறுமதியான தனது சொந்த உறுதிக்காணியை காரைதீவு ஆஸ்பத்திரிக்கு அன்பளிப்பாக வழங்கிய பேராசிரியர் த.வரகுணம் இப்பூவுலகிற்கு ஒரு வரப்பிரசாதம். இவர் ஏனையவர்களுக்கு ஒரு உதாரணபுருசர்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பின் ஏ.கே.கோடீஸ்வரன் காரைதீவு பிரதேச வைத்தியசாலைக்கான காணிஉறுதிப்பத்திரத்தை காரைதீவு பிரதேசசெயலாளரிடம் கையளித்துப் பேசுகையில் மேற்கண்டவாறு புகழாரம் சூட்டினார்.
இந்நிகழ்வு காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
காரைதீவு வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச். றிஸ்பின் தமக்களிக்கப்பட்ட காணி உறுதியை பாராளுமன்ற உறுப்பினருடாக காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த்திடம் கையளித்தார்.
காரைதீவு பிரதானவீதியில் வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள பலகோடீருபா பெறுமதியான 1ஏக்கர் காணியே இவ்விதம் அன்பளிப்பாக வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது.
அவ்வமயம் கல்லடியைச்சேர்ந்த இ.கி.மிசன் அபிமானியான காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை அம்மாவின் ஏகபுதல்வன் பேராசிரியர் வரகுணம் செய்த மாபெரும் கைங்கரியத்திற்கு சபையில் ஏகமனதாக நன்றிபாராட்டப்பட்டதோடு வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.
காரைதீவு மக்கள் சார்பாக பிரதேசசெயலாளர் மற்றும் மாவட்ட வைத்தியஅதிகாரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பேராசிரியருக்கு நன்றிகூறினார்.
அங்கு கோடீஸ்வரன் எம்.பி. மேலும் பேசுகையில்:
பேராசிரியர் வரகுணம் அவரது பெயருக்கேற்றாற்போல் ஜஸ்வர்யத்தை வரமாக வாரி வழங்கும் நற்குணத்தைப் பெற்றிருக்கிறார். இன்றைய காலகட்டத்தில் மனிதன் பணத்திற்கு பேயாய் அலைந்துகொண்டிருக்கின்றான்.
அப்படிப்பட்ட காலத்தில் கோடிக்கணக்கான தனது சொத்தை பொதுநோக்கத்திற்காக அதுவும் மக்களின் சுகாதார நோக்கிற்காக எவ்வித எதிர்பார்ப்புமின்றி வாரி வழங்கியமை என்பது சாமானியமான விடயமல்ல.
இது ஒரு பெரும் கொடை. இந்த மனம் யாருக்குத்தான் வரும்? வள்ளல் என்றால் பாரி என்பார்கள். என்னைப்பொறுத்தவரையில் சமகாலத்தில் வள்ளல் என்றால் நான் பேராசிரியர் வரகுணத்தையே சொல்வேன்.
அப்பேர்ப்பட்ட உதவியைப் பெற்ற காரைதீவு மண் சார்பாக மட்டுமல்ல முழு அம்பாறை மாவட்டம் சார்பாக நான் வாழ்த்துகின்றேன். நன்றிகூறுகின்றேன். என்றார்.
சபையிலிருந்த அனைவரும் கரகோசம் செய்து வாழ்த்துக்கள் கூறி நன்றியும் தெரிவித்தனர்.