எம்.ரீ.எம்.பாரிஸ்-
மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் 28.03.2017 மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைதலைவரும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் தலைமையில் ஓட்டமாவடி பிரதேச செயலக மன்டபத்தில் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ்.சில்மியா,உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத் ஆகியோரின் ஒருங்கினைப்புடன் இடம் பெற்றது.
இக்கூட்டத்தின் போது பிரதேச செயலாளர் பிரிவுகளில்; நடை பெறும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கு பிரதேச ஊடகவியலாளர்கள் முறையாக அழைக்கப்படுவதில்லை எனும் விடயம் ஊடகவியலாளர்களால் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைமைகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இவ்விடயம் தொடர்பாக மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைதலைவரும்,பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கேள்வி எழுப்பினார். இதற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம் றுவைத் இவ்வாறு கேலிக்கையாகவும், பொறுப்பற்ற முறையிலும் பதில் அளித்தார்.“ ஊடகவியலாளர்களின் தரவுகள் பிரதேச செயலகத்தில் இல்லை பிரதேச ஊடகவியலாளர்களை தமக்கு தெரியாது”
இது மக்களின் கவனத்திற்கு! அரசாங்கத்தினால் மக்களின் நன்மை கருதி ஒவ்வொரு மாதமும் நடாத்தப்படுகின்ற இவ்வாறான அரச உயர் மட்ட கூட்டங்கள் அரச மற்றும் தனியார் நிறுவனங்களினால் மக்களின் நலன் கருதி மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும், மேற்கொள்ளப்படவிருக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு அனுமதி வழங்கல் மற்றும் அது தொடர்பாக பொது மக்களினை பிரதிநிதித்துவ படுத்தும் நிறுவனங்களின் பிரதிநிதிகளின் கருத்துக்களை பெறல் “மக்களுக்காக அரசாங்கம் அரசாங்கத்திற்காக மக்கள் இல்லை” என்ற நல்லாட்சி அரசாங்கத்தின் உயர் கொள்கையின் அடிப்படையில் இவ்வாறான கூட்டங்கள் மக்கள் பிரதிநிதிகள்,அரச உயர் அதிகாரிகளின் பங்குபற்றுதல்களுடன் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சந்தர்பத்தில் மக்கள் நன்மை கருதி மெற்கொள்ளப்படும் தீர்மானம்,மக்களுக்கு பாதகமான திட்டங்கள் பற்றி மக்களை விழிப்பூட்டுவது ஊடகவியலாளர்களின் கடமையாகும்.
அன்றாடம் சாதாரண ஏழை மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அதீத கவனம் செலுத்தி அவர்களுக்கான நியாயமான தீர்வை நோக்கி அவர்களை நகர்த்தி செல்ல மக்களுக்காகவே சேவையாற்றும் ஊடகவியலாளர்கள் புறக்கனிக்கப்படல், தெரியாது என்று தப்பித்து கொள்ள நினைக்கும் பொறுப்பு வாய்ந்த இவ்வாறான அதிகாரிகள் இனிவரும் காலங்களில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும் இது விடயத்தில் அரச உயர் அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.