மசாஜ் நிலையம் எனும் பெயரில் இயங்கும் விபசார விடுதிகளை பொலிஸார் சுற்றிவளைக்கும் நடவடிக்கைகளிடையே, பலவந்தமாக உடற்பிடிப்பு நிலையத்தில் (மசாஜ் நிலையம்) உடற்பிடிப்பு செய்துகொண்ட புத்தளம் பொலிஸ் பிராந்தியத்தில் சேவையாற்றும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவவர் கைது செய்யப்பட்டு கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் செல்ல நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்தது.
நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஏற்கனவே விளக்கமறியலில் இருந்த நிலையிலேயே அவருக்கு நீர்கொழும்பு நீதிவான் ருச்சிர வெலிவத்த கடும் நிபந்தனையில் பிணையளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவதாவது,
புத்தளம் பொலிஸ் பிராந்தியத்தில் உயர் பதவியில் சேவையாற்றும் பொலிஸ் பரிசோதகர் தர அதிகாரியான மேற்படி சந்தேக நபர் நீர்கொழும்பில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றுக்கு சென்று அங்கு பணம் செலுத்தாது பலாத்காரமாக மசாஜ் செய்துகொண்டு வந்துள்ளார்.
இந் நிலையிலேயே அது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக அவரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்திருந்த நிலையில் அவர் சில நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் வழக்கானது மீள விசாரணைக்கு வந்தபோது, சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி எத்தனை முறை இவ்வாறு பலாத்காரமாக இவ்வாறு மசாஜ் செய்து கொண்டார். என நீதிவான் ருச்சிர வெலிவத்த பொலிஸாரிடம் கேள்வி எழுப்பினார். இதன்போது வழக்கை நெறிப்படுத்திய நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் சார்ஜன்ட், சந்தேக நபர் 5 முறை இவ்வாறு பலாத்காரமாக மசாஜ் செய்து கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இந் நிலையில் பொலிஸ் அதிகாரியை கடுமையாக எச்சரித்த நீதிவான் அவரை இரு சரீரப்பிணைகளில் விடுவித்ததுடன் சாட்சியாளர்களுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் அச்சுறுத்தல் விடுத்தால் பிணையை ரத்துச் செய்வதாக எச்சரித்தார்.