கடந்த வாரம் கட்சியின் தவிசாளராக இருந்த பசீர் சேகுதாவூத் அவர்களை அப்பதவியிலிருந்து இடை நிறுத்தியதனால், அடுத்த தவிசாளராக யாரை நியமிக்கப்போகின்றார்கள் என்ற பலரது எதிர்பார்ப்புக்கு மத்தியில் மிகவும் அமைதியான முறையில் அதியுயர்பீட கூட்டம் நடைபெற்றது.
கடந்த காலங்களில் இருந்த பதவி நிலைகளில் எந்தவித மாற்றங்களும் இடம்பெறவில்லை. அதாவது கட்சியின் தலைவராக ஏகமானதாக அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் ஏனய அனைத்து பதவிகளும் மாற்றமின்றி தெரிவு இடம்பெற்றது.
அத்துடன் வெற்றிடமாக உள்ள கட்சியின் தவிசாளர் பதவிக்கு ஹசன் அலி சேர் அவர்களை ஏற்றுக்கொள்ளுமாறு தலைவர் உட்பட அதியுயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக வேண்டுகோள் விடுத்தார்கள். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள ஹசன் அலி அவர்கள் மறுத்துவிட்டார்.
மேலும் அதியுயர்பீட கூட்டம் நிறைவடைந்த பின்பு தலைவரை முஸாபா செய்துவிட்டு ஹசனலி சேர் அவர்கள் சென்றுவிட்டார். ஆனால் அவரை சமரசப்படுத்தும் முயற்சியில் சில உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
இதற்கிடையில் கடந்தமுறை யாப்பு திருத்தத்தின் மூலம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்த முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் பதவியானது ஒரே நபரின் தலைமையின் கீழ் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது கட்சியின் அனைத்து அதிகாரமும் கொண்ட செயலாளராக மன்சூர் எ காதர் சேர் அவர்கள் ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய அதியுயர்பீட கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் அதியுயர்பீட உறுப்பினர்களினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அல்லாஹ் அக்பர் என்று கூறி சுமூகமான முறையில் முசாபா செய்துவிட்டு கலைந்து சென்றார்கள். இன்றைய அதியுயர்பீட கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நாளை நடைபெறும் பேராளர் மாநாட்டில், பேராளர்கள் முன்பாக சமர்ப்பிக்கப்படும், பேராளர்கள் அல்லாஹ் அக்பர் என்று கூறி ஏற்றுக்கொண்டதன் பின்பு தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்படும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது