சுலைமான் றாபி-
பொது மக்களின் நன்மை கருதி கல்முனை அஷ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு விரைவில் CT Scanner இயந்திரம் வழங்கப்படும் என சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால் காசிம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் கடந்த (14) இடம்பெற்ற மருத்துவ உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்;
இவ்வருடத்திற்குள் 4000 தாதியர்கள் வெளியாகவுள்ளனர். இதன் மூலம் சிறந்ததும், விரைவானதுமான சுகாதார சேவைகளை வழங்கவுள்ளோம். அதே போன்று நோய்த் தடுப்பு, சிகிச்சை, புனர்வாழ்வளிப்பு மற்றும் மனித வள அபிவிருத்தி போன்ற 4 முக்கிய துறைகளில் எமது அமைச்சு மிகுந்த அவதானத்துடன் செயற்படுகின்றது.
மேலும் ஒலுவில், பாலமுனை, மருதமுனை, இறக்காமம் உள்ளிட்ட பிரதேச வைத்தியசாலைகள் 100 மில்லியன் ரூபா அபிவிருத்தி செய்யப்யவுள்ளது. அதே போன்று சம்மாந்துறை மற்றும் பொத்துவில் ஆகிய வைத்தியசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதோடு விரைவில் கிழக்கில் இருதய மாற்று வழி (ByPass) சத்திர சிகிச்சையினை வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்
இலங்கையில் ஒரு சதமேனும் பணம் வாங்கப்படாத சேவையாக சுகாதார சேவை திகழ்வதோடு, இதனை வெற்றிகரமாக முன்கொண்டு தற்போது 5000 வைத்தியர்கள் தேவையாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் சுகாதாரப்பிரதி அமைச்சர் பைசால் காசிம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி திருமதி சகீலா இஸ்ஸதீன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.