தேசிய ஒற்றுமை அழித்து பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் ரணிலின் அரசிலமைப்பை எதிர்ப்போம் என்ற தொனிப் பொருளில் நாளை மாலை 3 மணிக்கு தமது கட்சியின் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக செயலாளர் மொஹமட் முஸம்மில் கூறினார்.
இந்த மாநாடு கட்சியின் உறுப்பினர்களுக்கு மட்டுமல்லாது இந்த தலைப்பை ஏற்றுக் கொள்ளும் அனைத்து இலங்கையர்களுக்குமானது என்று அவர் கூறினார். இந்த மாநாட்டிற்கு விஷேட பிரதிநிதியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டு முக்கியமான உரையொன்றை நிகழ்த்த உள்ளதாகவும் அவர் கூறினார்.
இன்று தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், நல்லாட்சி என்று பொய் கூறிக் கொண்டு மேற்கத்திய நாடுகளினதும், இந்தியாவினதும் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
இந்த அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எதுவும் செய்யவில்லை என்று அவர் குற்றம் சுமத்தினார்.