திருகோணமலை.ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலயத்தில் 01ம் தரத்திற்கு சேர்த்துக்கொள்ளப்படவிருக்கின்ற மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு ஆசிரியர் இல்லையென பெற்றோர்கள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு மகஜரொன்றினை இன்று (09) அனுப்பி வைத்துள்ளனர்.
திருகோணமலை வடக்கு கல்வி வலயத்தில் தமிழ் மூலமான
04 பாடசாலைகள் காணப்படுகின்றது.
இவ்வருடம் ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலயத்தில் 01ம் ஆண்டுக்கு சேர்த்துக்கொள்ளப்படவிருக்கின்ற மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு ஆசிரியர் இல்லையெனவும் மீன்பிடி மற்றும் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வரும் எங்களுக்கு பணம் கொடுத்து ஆசிரியர்கள் நியமிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் பெற்றோர்கள் அம்மகஜரில் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சருக்கும் கல்வி தினைக்கள உயரதிகாரிகளுக்கும் பல தடவைகள் பாடசாலையின் குறைபாடுகள்.ஆசிரியர் பற்றாக்குறைகள் பற்றி தெரியப்படுத்தியிருந்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் அம்மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் பாடசாலையின் குறைகளை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறும் மிக விரைவாக ஆசிரியரை நியமிக்குமாறும் அம்மகஜெரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 01ம் ஆண்டுக்கு சேர்த்துக்கொள்ளப்படவிருக்கின்ற பெற்றோர்களுக்கான கூட்டம் பாடசாலையின் அதிபர் ஜே.எம்.பசீர்தீன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடை பெற்ற போதே 01ம் ஆண்டுக்கு கற்பிக்க ஆசிரியர் இல்லையென அவர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் எதிர்வரும் 11ம் திகதி 01ம் ஆண்டு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் நிகழ்வு முடிவுற்றதையடுத்து பெற்றோர்கள் அன்றைய தினம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு செல்லவுள்ளதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.